
ஜம்மு காஷ்மீர் தேர்தலில்…
மொத்த தொகுதிகள்: 90
முடிவு அறிவிக்கப்பட்டது:90
பெரும்பான்மை:46
இண்டி கூட்டணி-49
பாஜக/.-29
பிடிபி-03
மற்றவை-09
ஜம்மு – காஷ்மீர் சட்டசபைக்கு 10 ஆண்டுகளுக்கு பின் தேர்தல் நடைபெற்றது. நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் தேசிய மாநாட்டுக் கட்சி (42) – காங்கிரஸ் (6) கூட்டணி 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இண்டி கூட்டணியில் இடம்பெற்ற மற்றொரு கட்சியான கம்யூனிஸ்ட் ஓர் இடத்தில் வென்றது. மொத்தம் இண்டி கூட்டணி 49 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக., 29 இடங்களிலும், மக்கள் ஜனநாயகக் கட்சி 3 இடங்களிலும் வென்றன.
2014ல் நடந்த தேர்தலில் இண்டி கூட்டணி 28 இடங்களையும் (தே.மா.கட்சி – 15, காங்கிரஸ் -12, கம்யூ., – 1), பா.ஜ., 25 இடங்களையும் கைப்பற்றியிருந்தது. அந்த வகையில் 2014 சட்டசபைத் தேர்தலைவிட காங்கிரஸின் வளர்ச்சி பாதியாகக் குறைந்தது. அதாவது 2014ல் 12 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸ், தற்போது 6 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சி 15ல் இருந்து 42 ஆக தன் கணக்கை உயர்த்தியுள்ளது. பாஜக.,வைப் பொறுத்தவரை 25 ஆக இருந்த தங்கள் எம்எல்ஏ.,க்களின் எண்ணிக்கையை 29 ஆக மாற்றியுள்ளது.
பகுதி வாரியாகப் பிரித்து பார்க்கையில், காஷ்மீரை உள்ளடக்கிய பகுதிகளில் 47 தொகுதிகளும், ஜம்முவை உள்ளடக்கிய பகுதிகளில் 43 தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் காஷ்மீரில் இண்டி கூட்டணி 41 இடங்களையும், மக்கள் ஜனநாயகக் கூட்டணி 3 இடங்களையும் கைப்பற்றின. அங்கு 19 தொகுதிகளில் மட்டுமே பாஜக., போட்டியிட்ட நிலையில், ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. அதுவே, ஜம்முவின் அனைத்து தொகுதிகளிலும் களமிறங்கிய பாஜக., 29 இடங்களில் வென்றது. அங்கு இண்டி கூட்டணிக்கு 8 இடங்களே கிடைத்தது.
இந்தப் புள்ளி விவரங்களைப் பார்க்கையில் ஜம்மு – காஷ்மீர் தேர்தல் காங்கிரசின் தோல்வியாகவே கருதப்படுகிறது. குறிப்பாக பகுதி வாரியாக ஜம்முவின் அனைத்து தொகுதிகளையும் குறி வைத்த பாஜக.,வின் திட்டத்திற்கு பெருமளவு பலன் கிடைத்துள்ளது. இண்டி கூட்டணிக்கு காஷ்மீர் பகுதி மட்டுமே அதிக இடங்களைக் கொடுத்து ஆட்சியமைக்க கைகொடுத்துள்ளது.
NC பெற்ற வாக்குகள்: 42 இடங்கள் (23.4%.)
பாஜக பெற்றது: 29 இடங்கள் (25.6%)
காங் பெற்றது: 6 இடங்கள் (11.9%).
மெஹபூபா முஃப்தி பெற்றது வெறும் 3 இடங்கள் (8.87%)!!
மெஹபூபா இப்படி மோசமாகத் தோற்றதற்குக் காரணமாக பாஜக.,வைச் சொல்கிறார்கள். ‘பாஜக.,வுடன் மெஹபூபா சென்ற முறை கூட்டணி வைத்து ஆட்சி அமைத்ததால்தான் 370 போகும் நிலை வந்தது. பாஜக.,வுடன் மெஹபூபா கூட்டணி வைத்தது தவறு’ என்று சொல்லி மக்கள் மெஹபூபாவுக்கு தோல்வியைக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
‘370ஐ மீண்டும் கொண்டு வருவேன்’ என்று சொன்ன ஒமர் அப்துல்லா நேற்று, “மோதிஜி ஒரு ஜெண்டில்மேன். அவரோடு இணைந்து செயலாற்றுவோம். மாநிலத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவோம். காங்கிரஸ் ஏன் இவ்வளவு கேவலமாகத் தோற்றது என சுயபரிசோதனை செய்ய வேண்டும்” என்றெல்லாம் பேசி பாஜக பக்கம் சாய்ந்திருக்கிறார்.
ஜம்முவில் இருக்கும் ஹிந்துக்கள் பாஜக.,வுக்கு பேராதரவு கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மையில் இருக்கும் காஷ்மீர் பகுதியில் பாஜக சில முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியும் அவர்கள் வெற்றி பெறவில்லை.
ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்கவுள்ள தேசிய மாநாட்டுக் (என்சி) கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் வெற்றி பெற்றுள்ள 48 வேட்பாளர்களில் இருவர் மட்டுமே ஹிந்து சமூகத்தினர்.
ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின. தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் இணைந்து 48 இடங்களில் வென்றன. இதில் தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் வென்ற சுரீந்தர் சௌத்ரி, அர்ஜுன் சிங் ராஜு ஆகிய இருவர் மட்டுமே ஹிந்துகள்.
ரஜௌரி மாவட்டத்தின் நௌஷேரா தொகுதியில் ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னாவை சுரீந்தர் சௌத்ரி 7,819 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
பாஜக வேட்பாளர் சூரஜ் சிங் பரிஹா ரைவிட 9,013 வாக்குகள் வித்தியாசத்தில் ராம்பன் தொகுதியில் அர்ஜுன் சிங் ராஜு வெற்றி பெற்றார்.
தேசிய மாநாட்டுக் கட்சி ஒரு பெண் உள்பட 9 ஹிந்து வேட்பாளர்களை நிறுத்தியது. மறுபுறம், ஜம்மு பிராந்தியத்தில் காங்கிரஸ் களமிறக்கிய 19 ஹிந்து மற்றும் 2 சீக்கிய வேட்பாளர்களில் யாரும் வெற்றி பெறவில்லை.
அதேநேரம், 29 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக.,வில் 28 ஹிந்துகள் மற் றும் ஒரு சீக்கிய உறுப்பினர் உள்ளனர். பாஜக., களமிறக்கிய முன்னாள் அமைச்சர்கள் இருவர் உள்பட அதன் 25 முஸ்லீம் வேட்பாளர்களும் தோல்வியைத் தழுவினர்.
ஹரியாணா தேர்தலில்…
ஹரியானா மொத்த தொகுதிகள்: 90
முடிவு அறிவிக்கப்பட்டது:90
பெரும்பான்மை:46
பாஜக+ 48
காங்கிரஸ்+ 37
மற்றவை 05
ஹரியானா முதல்வராக வரும் 12ம் தேதி நயாப் சிங் சைனி பதவியேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை ஹரியானா சட்டசபைத் தேர்தலில் பாஜக., பெற்று 3வது முறையாக அரியணை ஏறுகிறது. கருத்துக் கணிப்புகளை புறம்தள்ளி பாஜக., அமோகமாக வெற்றி பெற்றுள்ளது.
ஹரியாணா மாநிலத்தின் முதல்வராக நயாப் சிங் சைனி வரும் 12ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மாநிலத் தலைவர் மோகன்லால் படோலியுடன் தில்லி வந்துள்ள சைனி, பிரதமர் மோடியை சந்திக்கிறார். பின்னர் வரும் 12ம் தேதி முதல்வராகப் பதவி ஏற்கிறார்.
ஹரியாணா முதல்வராக மனோஹர் லால் கட்டார் இருந்த காலத்தில் அவர் மீதான எதிர்ப்பு மற்றும் ஆட்சிக்கு எதிரான மக்களின் மனோநிலையைக் கருத்தில் கொண்டு முதல்வராக அமர வைக்கப்பட்டார் நயாப் சிங் சைனி. தேர்தலுக்கு வெறும் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அவர் முதல்வராக அமர்த்தப்பட்டார். தேர்தலுக்கு முன்பாக முதல்வராக பதவியில் இருந்த போது மேற்கொண்ட சில நடவடிக்கைகளே வெற்றியை பெற்று தந்திருக்கிறது. அவர் லாத்வா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மேவா சிங்கை 16,054 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அக்னி வீர் திட்டத்தில் வேலைவாய்ப்பு, தொழில்களுக்கான வாய்ப்புகளை அனுமதிக்கும் வகையிலான கொள்கையை கொண்டு வந்தவர் நயாப் சிங் சைனி. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் அவர் எடுத்த நடவடிக்கைகள் போன்றவையே வெற்றிக்கு காரணமாக இருந்தன. இதனால் நயாப் சிங் சைனியையே மீண்டும் முதல்வராக பதவியில் அமர்த்த பாஜக., தலைமை முடிவு எடுத்துள்ளது. கூடிய விரைவில் உரிய அறிவிப்பு வெளியாகும் என்று கட்சி தொண்டர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.