புது தில்லி: இந்திய நிலப் பகுதியான ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து, இலங்கையின் மன்னார் வரையிலான மன்னார்வளைகுடா பகுதியில், ஹிந்துக்களின் கடவுளாக வணங்கப் படும் ராமர் மேற்பார்வையில் கட்டப்பட்டதாக பாரத நாட்டின் பாரம்பரிய வரலாற்றுக் காவியமான ராமாயணத்தில் கூறப்படும் ராம சேதுவை, தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்.
இந்த வழக்கில் தனது நிலைப்பாட்டைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டிருந்தது. ஆனால், 10 ஆண்டுகளாகியும் தனது நிலைப்பாட்டை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை.
இதை அடுத்து, மத்திய அரசு உடனடியாக ராமசேதுவை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தினார்.
இந்நிலையில், இன்னும் 10 நாட்கள் காத்திருக்குமாறு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு சுப்பிரமணிய சுவாமிக்கு பதில் அளித்துள்ளது.


