2000rupeenote - 2026

திருப்பதி:2000 ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சடித்த 10 பேர் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நெடமலூரில் கைது செய்யப் பட்டனர். திருப்பதி குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு, 10 லட்சத்து இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள், 19.22 காரட் வைரம், கலர் பிரிண்டர், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

திருப்பதி குற்றத்தடுப்பு காவல் நிலைய போலீசார் நேற்று காலை திருப்பதி ஆர்.சி ரோடு பகுதியில் உள்ள யுனிமணி நிதி நிறுவனம் அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் காணப்பட்ட அனந்தப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அத்தர் முகமது அலி, முகமது காஜா இம்ரான் ஆகியோரை பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது ஐந்து 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை அவர்களிடம் இருந்து போலீசார் கைப்பற்றினர். அப்போது நாங்கள் வைர வியாபாரம் செய்பவர்கள். எங்களிடம் வைரம் வாங்கியவர்கள் போலி 2000 ரூபாய் நோட்டை கொடுத்து ஏமாற்றிவிட்டனர் என்று புகார் கூறினர்.

இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் இரண்டு பேரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள நெடமலூருக்கு சென்ற போலீசார் அங்கு நாராயணா காலணியில் இருக்கும் அப்பார்ட்மென்ட் ஒன்றில் சோதனை நடத்தினர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்! 

அங்கு பதுங்கியிருந்த ராஜமுந்திரியை சேர்ந்த நவநீத குமார், விஜயவாடாவை சேர்ந்த பாலகுமார், பவன் குமார், விசாகப் பட்டினத்தை சேர்ந்த பாபு நாயுடு, வர்மா, தர்மாவரத்தை சேர்ந்த மோகன், கிருஷ்ணா மாவட்டம் மயிலவரத்தை சேர்ந்த முரளி கிருஷ்ணா, சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த சரண்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகள், 5 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 19.22 கேரட் வைர கற்கள், ஒரு கலர் பிரிண்டர், இரண்டு லேப்டாப்புகள், கள்ள நோட்டுகளை அச்சடிக்க தேவையான காகிதங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் இன்று திருப்பதியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த திருப்பதி எஸ் பி அன்பு ராஜன், கள்ள நோட்டுகள் அச்சிடப்பட்டு விவகாரத்தில் போலீசார் 10 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 10 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகள், 5 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வைர கற்கள் ஆகிவை உட்பட கள்ள நோட்டுகள் அச்சிட பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். கைது செய்யப்பட்ட 10 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருக்கிறோம் என்று கூறினார்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending