புது தில்லி: தமிழகத்தில், கோவில் வளாகங்களில் கடைகளை அமைத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து, தமிழகத்தில் உள்ள ஆலய வளாகங்களில் கடைகளை அமைக்க தமிழக அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இது குறித்து வழக்கு தொடர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரைச் செர்ந்த ராஜா குறிப்பிடுகையில், திட்டமிட்ட ரீதியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் தீ விபத்தை ஏற்படுத்தி அதைக் காரணமாக வைத்து தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரம் கோவில்களில் உள்ள சுமார் 4 லட்சம் கடைகளை காலி செய்ய உத்தரவு பெறப் பட்டது.
இதை அடுத்து, அறநிலைய துறையின் உத்தரவை ஏற்று நாளைக்குள் அதாவது ஜனவரி – 31 க்குள் அனைத்து கோவில் கடைகளையும் அகற்ற உத்தரவிட்ட உயர்நீ திமன்ற உத்தரவிற்கு நான் செயலாளராக உள்ள ஆண்டாள் கோவில் கடை சங்கத்தின் மூலம் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கோவில் கடைகளை காலி செய்யும் உத்தரவிற்கு தடைவிதித்தது உச்ச நீதிமன்றம். ஆண்டாள் திருவடிகளே சரணம் என்றார்.