உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய 35 வயதுப் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தினார். இந்தப் புகாரை கடந்த சனிக்கிழமை தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தப் புகாரின் பின்னணியில் மிகப் பெரும் அளவில் சதி இருப்பதாகக் கருத்து தெரிவித்தது.
இந்த வழக்கில் தலைமை நீதிபதியை சிக்க வைக்க சதி நடப்பதாக உத்சவ் சிங் பெயின்ஸ் என்ற வழக்கறிஞர் கூறி மேலும் பரபரப்பைக் கூட்டினார். தொடர்ந்து, பிரமாணப் பத்திரம் ஒன்றையும் தாக்கல் செய்தார். தங்களுக்கு சாதகமாக நீதியை வளைக்க, இதுபோன்ற புகார்களை ஜோடித்துத் தர புரோக்கர்கள் இருப்பதாகவும், தம்மிடம் ஒன்றரை கோடி ரூபாய் வரை இந்த விவகாரத்தில் பேரம் பேசப்பட்டது என்றும் கூறினார்.
இந்நிலையில், நீதித்துறையை கட்டுப்படுத்த முயற்சிப்பவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். இவர்களை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும். பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் நீதித்துறையை ஒரு போதும் கட்டுப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்தது.
இதுபற்றி விசாரிக்க நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்நிலையில், இந்தக் குழுவில் இருந்து நீதிபதி ரமணா விலகியுள்ளார். அவர் தனிப்பட்ட முறையில் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறினார். இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் எனது நெருங்கிய நண்பர்! அவர் எனக்கு ஒரு குடும்ப உறுப்பினர் போன்றவர்! அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவேன்… இந்த விசாரணைக் குழுவில் நான் இருப்பது முறையில்லை என்று கூறி, நீதிபதி ரமணா விலகியுள்ளார்.
இந்தமூன்று நபர் குழுவில், எஸ் ஏ பாப்டே, உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.