மத்திய அமைச்சரவையில் ஆச்சரியப்படுத்தும் விதத்தில்… வெளியுறவுத் துறையை வசமாக்கிய தமிழர்!

Published:

jaishankar - 2026

பிரதமர் மோதி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுக் கொண்டது. இந்நிலையில் இன்று அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டன. இதில், இரண்டு தமிழர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். ஒருவர் நிர்மலா சீதாராமன். மற்றவர் இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற ஜெய்சங்கர்.

இவர்களின் ஜெய்சங்கரின் பெயர் அமைச்சராக அறிவிக்கப் பட்டதுதான் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. காரணம், இவர் கட்சியில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப் படவில்லை. தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், இவரைத் தேடி இந்தப் பதவியை அளித்துள்ளார் பிரதமர் மோதி.

ஜெய்சங்கர், இந்திய வெளியுறவுத் துறை சேவைக்கான, ஐ.எஃப்.எஸ் அதிகாரியாகப் பணியாற்றி, உலகின் அனைத்து நாடுகளிலும் அறியப்பட்டவர்.

1955-ஆம் ஆண்டு தில்லியில் பிறந்தவர், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
இவரின் தந்தை சுப்பிரமணியம் இந்தியக் குடிமைப்  பணி அதிகாரியாகப் பணியாற்றியவர். ஜெய்சங்கரின் மனைவி பெயர் கியாகோ. இவர்களுக்கு துருவா, அர்ஜுன், மேத்தா என 3 வாரிசுகள்.s jaishankar - 2026

ஜெய்சங்கர் தனது படிப்பை தில்லியில்தான் முடித்தார். ஸ்டீபன் கல்லூரியில் பட்டம்!
அரசியல் அறிவியல் பாடப் பிரிவில் முதுகலைப் பட்டம்! தொடர்ந்து தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலையில் ஆய்வுப் பட்டம் பிஹெச்.டி ! அதன் பின்னர் 1977ல் ஐ.எஃப்.எஸ் அதிகாரியாகத் தேர்வாகி பணியாற்றத் தொடங்கினார். பல்வேறு நாடுகளில் உள்ள தூதரகங்களில் பல்வேறு பொறுப்புகளில் பணி ஆற்றியிருக்கிறார்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலராக 1985- 1988 வரை பணியாற்றி, பின்னர் இரண்டு ஆண்டுகள் இலங்கையில் பணியாற்றினார். இந்திய
அமைதிப் படைக்கு அரசியல் ஆலோசகராகவும் இருந்துள்ளார். இந்தியாவின் ளியுறவுத்துறை தொடர்பாக ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றியவர். இவரது செயல்பாடு காரணமாக இந்திய வெளியுறவுச் செயலாளர் பட்டியலில் இவரது பெயர் அடிக்கடி இடம்பெறும்.

jaishankar2 - 2026

2007- 2009 வரை சிங்கப்பூருக்கான இந்திய உயர்
ஆணையராகப் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து சீனாவுக்கான இந்திய தூதரானார். சீனாவுக்கான இந்தியத் தூதராக அதிக காலம் (நான்கரை ஆண்டுகள்) பணியாற்றியவர் ஜெய்சங்கர்தான். இந்தியா, சீனா இடையிலான வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தங்களில் இவரது பங்களிப்பு பெருமளவில் இருந்தது. இரு நாட்டு எல்லைப் பிரச்னை வரும் போதெல்லாம் இவர் முக்கியத்துவம் பெறுவார்.

வெளியுறவு செயலராக இருந்த சுஜாதா சிங்கின் தந்தை ராஜேஸ்வர், சோனியாவுக்கு நெருக்கமானவர். 2013ல் வெளியுறவு செயலராக ஜெய்சங்கரை நியமிக்க அப்போதைய பிரதமர்  மன்மோகன்சிங் விரும்பினார். ஆனால், சோனியா தலையிட்டு, சுஜாதா சிங்கை வெளியுறவு செயலராக்கினார். மோதி பிரதமர் ஆன பிறகு 2015, ஜனவரியில் அப்போதைய வெளியுறவுச் செயலாளர் சுஜாதா சிங் பதவி நீக்கம் செய்யப் பட்டார்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

மோதி குஜராத் முதல்வராக இருந்த போது, இவர் சீனாவில் இந்தியத் தூதராக இருந்தார். அப்போதுதான் இருவருக்கும் நட்பு முறைப் பழக்கம் ஏற்பட்டது. மோடி முதல் முறையாக சீனா சென்ற போது ஏற்பட்ட பழக்கம் பின்னரும் தொடர்ந்தது.

பின்னர் ஜெய்சங்கர் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக 2013-ஆம் ஆண்டு நியமிக்கப் பட்டார். மோதிக்கு குஜராத் கலவரம் காரணமாக அமெரிக்கா விசா அளிக்க மறுத்தது. ஆனால் பின்னர், 2014-இல் பிரதமர் மோதி பதவி ஏற்ற பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்து, உரையாற்றச் செய்வதில் பெரும் பங்காற்றினார் ஜெய்சங்கர். இந்த சவாலான பணியை ஏற்று, அமெரிக்காவில் மோதியின் இமேஜை மாற்றி அமைத்தார்! அதன் மூலம், இந்திய – அமெரிக்க உறவு பலப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினார்.

மோடிக்கும் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இடையே நட்பை பலப் படுத்தினார் ஜெய்சங்கர். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்திய ஜெய்சங்கர், அதேநேரம் ரஷ்யா, சீனாவுடனும் உறவு சீர்குலையாமல் பார்த்துக் கொண்டார்.

பின் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளராக பதவி வகித்தார். 2015 முதல் மூன்று ஆண்டுகள் சிறப்பாகப் பணி செய்தார். டோக்லாம் விவகாரத்தில் மோதி தொடர்ந்து 2 மாதங்களுக்கு மேல் ஜெய்சங்கருடன் தீவிர ஆலோசனை செய்துள்ளார்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

உலக அளவில் சக்திமிக்க நாடாக இந்தியா வர வேண்டும் என்ற மோதியின் கனவை
புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப செயல்பட்டார் ஜெய்சங்கர். இதனாலேயே வெளியுறவு செயலராக ஓய்வு பெற்ற ஜெய்சங்கரை இரண்டு முறை பணி நீட்டிப்பு செய்தார் மோதி. தனது பெரும்பாலான வெளிநாட்டுப் பயணங்களில் ஜெய்சங்கர் உடன் இருக்க வேண்டும் என்று மோதி விரும்பினார்.

இவ்வாறு அதிகார மட்டத்திலேயே சிறப்பாகப் பணி செய்த ஐ எஃப் எஸ் அதிகாரியான ஜெய்சங்கரை வெளியுறவுத் துறை அமைச்சர் ஆக்கி அதிர்வலைகளை ஏற்படுத்தி யுள்ளார் மோதி. இவரது தேர்வு, உலக நாடுகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img