யாருடைய அப்பன் வீட்டு சொத்து என்று அன்று கேட்ட ஜெகன் இன்று திறப்பு விழாவுக்கு செல்வாரா….? சோஷியல் மீடியாவில் சர்ச்சை….!
காளேஸ்வரம் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற 15 நாட்களிலேயே ஜெகன் ‘ஜலதீட்சை’ என்று மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார் .
“யாருடைய அப்பன் வீட்டு சொத்து ?” என்று அப்போது ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவை கேள்வி கேட்டார். இப்போது ஜெகன் மோகன் ரெட்டி, அதே திட்டத்துக்கான திறப்பு விழாவுக்கு எவ்வாறு செல்லலாம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
தெலங்கானா மாநிலத்துக்கு வரப்பிரசாதமாக எண்ணப் படுவது காளேஸ்வரம் திட்டம். இந்த திட்டம் நிறைவடைந்து, இப்போது திறப்பு விழாவுக்கு தயாராகிவிட்டது. 45 லட்சம் ஏக்கரில் 2 போகம் பயிர் விளைவிப்பதற்கு அதிக பட்சம் தினம் 3 டிஎம்சி வீதம் நீரை தூக்கி இறைக்கும் வண்ணம் பிராஜெக்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தினமும் 2 டிஎம்சி தண்ணீரை தூக்கி இறைக்க வேண்டும் என்று அண்மையில் நடந்த கூட்டத்தில் தெலங்கானா முதல்வர் அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார்
ஆண்டுக்கு 540 லிருந்து 600 டிஎம்சி வரை நீரைத் தூக்கிப் பாய்ச்சி தெலுங்கானா மாநிலத்தை நீர் வளம் மிக்க மாநிலமாக்க வேண்டும் என்ற கேசிஆரின் கனவு நனவாகப் போகிறது.
நீரை லிஃப்ட் செய்வதற்கு மிக அதிக மின்சாரம் தேவைப்படினும் எந்த விதத்திலும் பின் வாங்க வேண்டாம் என்று அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்! ஜூன் 21-ஆம் தேதி காலேஸ்வரம் திட்டத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்த விழாவுக்கு முக்கிய விருந்தினர்களாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஆந்திர முதல்வர் ஜெகன் இருவரையும் கேசிஆர் அழைத்துள்ளார். ஏற்கெனவே மும்பை சென்று தேவேந்திர பட்னாவிஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த கேசிஆர் ஜூன் 17ஆம் தேதி (நாளை) அமராவதி சென்று ஜகனை அழைக்க உள்ளார்!
இந்த திட்டத்தின் செயலாக்கத்தில் எந்த விதத்திலும் தகராறு செய்யாமல், திட்டம் செயல் வடிவம் பெறுவதற்கு உதவிகரமாக இருந்த இரு அண்டை மாநில முதல்வர்களான தேவேந்திர பட்னாவிஸையும் ஜெகனையும் கேசிஆர் அழைக்கிறார்.
இரு தெலுகு மாநிலங்களுக்கு இடையே நல்லவிதமான தொடர்புகள் நிலவும் கோணத்தில் பார்த்தால் ஆந்திர முதல்வர் ஜெகன் இந்த திட்டத்தின் தொடக்க விழாவுக்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகம் தென்படுகின்றன.
இரு மாநில பிரிவினை பிரச்னைகளை சமரசமாக தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார் ஜகன். அதில் ஒரு முக்கிய முதல் கட்டமாக, ஹைதராபாத்தில் இருந்த ஆந்திர பிரதேசத்துக்குச் சொந்தமான கட்டடங்களை தெலங்கானாவுக்கு ஒப்படைத்து ஆதரவு காட்டினார் ஜெகன்.
கேசிஆருடன் அனாவசிய தகராறுகள் கூடாது என்று சமரச எண்ணத்துடனேயே ஜெகன் இருக்கிறார். ஆனால் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் மட்டும் உச்சத்தில் உள்ள மாநிலமான தெலங்கானாவின் பயன்பாட்டுக்காக, காளேஸ்வரம் திட்டத்தின் திறப்பு விழாவுக்கு ஜெகன் எவ்வாறு போகலாம் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்
2016 இல் காளேஸ்வரம் திட்டத்தின் பூமி பூஜைக்கு எதிராக ஜெகன் மூன்று நாட்கள் கர்னூலில் ஜலதீட்சை என்ற பெயரில் உண்ணாவிரதமிருந்தார்! அப்படி இருக்க 2019-ல் அதே திட்டத்தின் திறப்பு விழாவுக்கு முக்கிய விருந்தினராக செல்வது அழகா என்று கேள்வி கேட்கிறார்கள்.
“தெலங்கானா திட்டங்களினால் ஆந்திரமும் தெலங்கானாவும் இந்தியா பாகிஸ்தான் போல் ஆகி விடாதா? குடிக்க தண்ணீர் இல்லாமல் நாங்கள் எப்படி வாழ்வது? பூபாலபல்லி தெர்மல் திட்டத்துடன் சேர்த்து கோதாவரி நீர் ட்ரிப்யூனல் கடந்த காலத்தில் ஏபிக்கு 1480 டிஎம்சி ஒதுக்கியது. அதில் எங்கள் பங்கு 950 டிஎம்சி. மீதி 530 டிஎம்சி உங்களுடையது என்று கேசிஆர் சொல்கிறார். நான் கேட்கிறேன் யாருடைய அப்பன்வீட்டு சொத்து இது என்று?” எனப் பேசிய ஜெகனின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.