ஹைதராபாத் ஹயத் நகரில் இளம்பெண்ணைக் கடத்திய கடத்தல்காரன் குறித்து துப்பு கூறினால் ஒரு லட்ச ரூபாய் சன்மானம் தரப்படும் என்று காவல் துறை கூறியுள்ளது.
நகரில் இளம்பெண் கடத்தல் வழக்கு காவல்துறைக்கே தலைவலியாக மாறியுள்ளது. ஐந்து நாட்களாகியும் கடத்தல்காரனை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் தலையை பிய்த்துக் கொள்கின்றனர்.
கடத்தலில் ஈடுபட்டவரைக் குறித்து துப்பு கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பதாக போலிஸார் அறிவித்துள்ளனர். தகவல் தருபவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று ‘ராசகொண்டா ‘ போலீஸ் கமிஷனர் மகேஷ்பகவத் அறிவித்துள்ளார்.
பி பார்மஸி மாணவியான 21 வயது சோனியாவை கடத்திய மிகவும் தேடப் படும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ள ரவிசேகரைப் பிடிக்க முடியாமல் காவல்துறை திணறுகிறது.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பல இளம் பெண்களை கடத்திய கில்லாடி கிரிமினல், இப்போது போலீசாருக்கு சவாலாகி உள்ளான். ஆந்திரம், தெலங்காணா மட்டுமின்றி, கர்நாடகாவிலும் தேடுதல் வேட்டையில் காவல்துறை இறங்கியுள்ளது.
கடத்தல்காரனின் சொந்த கிராமத்தில் விசாரித்தும் எந்த பலனும் இல்லை. அவனுடைய மகனையும் மருமகனையும் கைது செய்து விசாரித்தும் வழக்கில் முன்னேற்றம் இல்லை. கடத்திச் சென்று ஐந்து நாட்கள் ஆகிவிட்டதால் இளம் பெண்ணுக்கு என்ன நேர்ந்ததோ என்ற கவலையில் பெண்ணின் பெற்றோர் தவித்து வருகின்றனர்.
” என் மகனை என்கௌன்டரில் கொன்று விடுங்கள். அவன் பிணத்தைக் கூட நான் பார்க்க விரும்பவில்லை” என்று கடத்தல்காரனின் தாய் வெறுத்துப்போய் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி இளம்பெண் சோனியோடு அவள் தந்தையையும் ஜூலை 23ம் தேதி ரவிசேகர் காரில் அழைத்துச் சென்றான்.
ஹயத்நகரில் காரை நிறுத்தி சோனியின் சர்டிபிகேட்டை ஜெராக்ஸ் காப்பி எடுத்து வரச்சொல்லி பெண்ணின் தந்தையை அனுப்பிவிட்டு இளம் பெண்ணோடு காரில் மாயமானான் ரவிசேகர்.
சிசிடிவி கேமரா காட்சிகளில் கார் நம்பரை கவனித்த போலீசார், தீவிர விசாரணையில் இறங்கினர். அதில் கர்நாடகா குல்பர்காவில் திருட்டுப் போன கார் அது என்பதை அறிந்தனர்.
இதை அடுத்து தீவிரத் தேடலில் காவல் துறை ஈடுபட்டுள்ளது. இளம்பெண் சோனியை கடத்தியவன் படுமோசமான குற்ற வரலாறு கொண்டவன் என்பது தெரியவந்துள்ளது. ரவிசேகரின் மேல் இரு தெலுகு மாநிலங்களிலும் 26 க்கு மேல் திருட்டு மற்றும் கடத்தல் வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதற்குமுன் இம்மாதம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இரண்டு இளம் பெண்களை நம்ப வைத்து ஏமாற்றி 65 ஆயிரம் ரூபாய் கறந்துள்ளான்! இருவரையும் வேலை வாங்கித் தருவதாக நாள் முழுவதும் சுற்றோ சுற்று என்று சுற்றிவிட்டு 22ஆம் தேதி மயானத்தின் அருகில் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு அதே காரில் ஹைதராபாத் வந்து சோனியை கடத்தியிருப்பதாகத் தெரிகிறது.
இத்தனை தொழில்நுட்ப வசதிகள் இருந்தும்கூட கடத்தல்காரனை கண்டுபிடிக்க முடியாமல் திணறுவது போலீசுக்கே சவாலாக மாறியுள்ளது!