காஷ்மீர் மாநிலத்திலிருந்து லடாக்கை பிரித்து, சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காஷ்மீர் விவகாரம் குறித்து சீன செய்தி தொடர்பாளர் கூறிய போது… காஷ்மீர் விவகாரம் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பிரச்னை. ஆனால் லடாக்கை காஷ்மீரிலிருந்து பிரித்து யூனியன் பிரதேசமாக ஆக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இரு நாடுகளுக்கு இடையே சுமூகமான சூழல் நிலவும் போது, இவ்விவகாரம் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
காஷ்மீர் குறித்து தன்னிச்சையான நடவடிக்கை எடுப்பதை இந்தியா தவிர்க்க வேண்டும். சீன நிலப் பகுதியை தங்களது நிர்வாகப் பகுதியாக இந்தியா காட்டி வருவதை, சீனா எப்போதும் எதிர்த்து வருகிறது. எல்லை பிரச்னையில் இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.
இந்நிலையில் சீனா தெரிவித்த கருத்துக்கு இந்தியா தனது எதிர்ப்பினைப் பதிவு செய்தது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில்… காஷ்மீர் குறித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட மசோதாக்கள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடாது; அதுபோல மற்ற நாடுகளும் செயல்படும் என நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளது.