spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாதமிழக மீனவர்களின் தாயாக விளங்கியவர் சுஷ்மா ஸ்வராஜ்!

தமிழக மீனவர்களின் தாயாக விளங்கியவர் சுஷ்மா ஸ்வராஜ்!

- Advertisement -

சுஷ்மா ஸ்வராஜ் தமிழக மீனவர்களின் தாயாக விளங்கியவர் என்று தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல்த்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்ட இரங்கல் செய்தி:

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் திடீர் மறைவு பாரதிய ஜனதா கட்சிக்கும், நமது நாட்டிற்கும் மாபெரும் இழப்பாகும். அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை. இறைவனுடைய திருப்பாதத்தை அடைந்துள்ள திருமதி. சுஷ்மா அவர்களின் ஆன்மா நற்கதியடைய எல்லம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்.

திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் தன்வாழ்நாள் முழுவதையும் நாட்டுப்பணிக்காக அர்ப்பணித்தவர். அவருடைய அரசியல் வாழ்க்கையானாலும், அரசின் ஆட்சியிலும் அவர் வகிக்காத பொறுப்புகளே இல்லை என்ற அளவிற்கு மாநில முதலமைச்சராகவும், மத்திய அரசில் பல்வேறு துறைகளில் அமைச்சராகவும், தான் பொறுப்பு வகித்த துறைகளில் சாதனைகள் பல நிகழ்த்திக் காட்டியவர்.

பாஜக ஆட்சியில் இல்லாத காலத்தில் பாராளுமன்றத்தில் கட்சியின் எதிர்க்கட்சி தலைவராக திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் இருந்த போது, நான் கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டேன். எந்தவொரு நிகழ்ச்சிக்காக தமிழகத்திற்கு அழைத்தாலும் மறுப்பேதும் சொல்லாமல் உடனடியாக சம்மதம் தெரிவிப்பதுடன், நிகழ்ச்சியில் கலந்து கொள்வதோடு தனது முழு ஈடுபாட்டை காட்டி நிகழ்ச்சியை வெற்றி பெறச் செய்தவர்.

04/02/2011 வேதாரண்யம், பூங்காவனம் என்ற பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்ட போது, பாதிக்கப்பட்ட அனைவரின் வீடுகளுக்கும் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதலும், உதவித்தொகையும் வழங்கியதோடு, இந்த பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன் என கூறிச் சென்றார். பாராளுமன்றத்தில் இலங்கை அரசுக்கு வெளிப்படையாக எச்சரிக்கை செய்தது மட்டுமல்லாமல், இந்தியாவுக்கான இலங்கை தூதரை அழைத்து, ”இனியும் இது போன்று நடக்கும் என்றால் அதற்கான எதிர்வினையை இலங்கை சந்திக்க தயாரக இருக்க வேண்டும்” என எச்சரிக்கை செய்தார். அதுவரை தமிழக மீனவர்கள் என்றிருந்த நிலையில் இந்திய தமிழ் மீனவர்கள் என்ற சொல்லாபத்தை பயன்படுத்தியவர் திருமதி.சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள்.

நமது மீனவர்கள் இலங்கையினால் பாதிக்கப்பட்ட போது அடுத்த நாளே தானாக முன்வந்து (தமிழக பாஜக கட்சித் தலைவராக இருந்த என்னிடம் கூட சொல்லாமல்) டெல்லியில் மாபெரும் கண்டன கூட்டத்தை திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் நடத்தினார்.

இந்திய தமிழ் மீனவர்களின் துயரத்தை போக்க, இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு நான் கடல் முற்றுகை போராட்டம் நடத்திய போது, அதனை வரவேற்றதுடன், எனக்கு தனது பாராட்டையும் தெரிவித்தார். 31/01/2014ல், இராமேஸ்வரத்தில் நமது மீனவ சகோதரர்களின் நல்வாழ்விற்காக கடல்தாமரை மாநாடு நடத்திய போது, அதில் திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல், பாஜகவின் அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களுக்காக தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று அங்கேயே அறிவித்தார். இன்றைய தினம் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மீனவர்களின் நலனுக்காக தனி அமைச்சகம் அமைத்து மீனவ சமுதாயத்திற்கு பெருமைபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு 2014ல் பதவி ஏற்ற பின்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பு வகித்த திருமதி.சு ஷ்மா ஸ்வராஜ் அவர்கள், இந்தியாவின் கௌரவத்தையும், பெருமையும் உலக அரங்கில் நிலைநாட்ட தனது முழு கவனத்தையும் செலுத்தி ஓய்வின்றி பணியாற்றினார். தனது சிறுநீரகம் முழுமையாக பாதிக்கப்பட்டு மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்ட பின்பும் கூட தனது பணியை அவர் நிறுத்தவில்லை.

திருமதி.சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பை ஏற்ற பின்னர், இலங்கை மற்றும் இந்திய தமிழ் மீனவர்களுக்கிடையே 7 முறை நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இலங்கை மற்றும் இந்திய அரசுக்கிடையே மீனவர்கள் நலன் குறித்து 6 முறை பேச்சுவார்த்தை நடந்தது.

நமது மீனவர்களின் துயரத்தை நிரந்தரமாக போக்க, ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக இந்திய, இலங்கை அரசுகளின் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு 3 மாதங்களுக்கு ஒருமுறை இக்குழு சந்தித்து விவாதிக்க வேண்டும் என்பதோடு, அதிகாரிகள் மட்டத்திலும் 3 மாதங்களுக்கு ஒருமுறை சந்திக்கவும் ஏற்பாடு செய்தார்.

ரூபாய் 1500 கோடியில் இந்திய தமிழ் மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு வசதியாக படகுகளை கட்ட திட்டத்தை வகுத்து கொடுத்து, அதற்கான பணிகள் நடைப்பெற்று வருகின்றன. படகுகள் கட்ட தாமதமாகும், மீனவர்களிடம் ஏற்கனவே உள்ள படகுகளை மாற்றம் செய்தால் அது இலகுவாக இருக்கும் என நான் கூறியபோது, உடனடியாக ரூபாய் 10 லட்சம் மானியம் வழங்கியதுடன், பரிட்சார்த்த முறையில் இதனை செயல்படுத்த 10 மீனவர்களின் விவரங்களை உடனே தாருங்கள் என கூறி அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்தார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் இந்திய தமிழ் மீனவர்களின் கவலைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கும் வகையில் செயல்படுவதற்கு திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் செயல்பட்ட விதம் என்றும் மறக்க முடியாது.

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் அரசு பதிவி ஏற்றவுடன், அதுவரை ஒரு வருடத்திற்கும் மேலாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வைத்ததுடன், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நமது மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க ஏற்பாடு செய்தார். என்னுடைய பார்வைக்கு வந்த ஈரான், பஹ்ரைன், செஷல்ஸ், இலங்கை, ஏமன் போன்ற பொல்வேறு நாடுகளில் சிறை பிடிக்கப்படும் நமது மீனவர்களை மீட்க, நான் எந்த நேரத்திலும் உரிமையோடு அழைத்து பேசும் அளவிற்கு எனக்கு சுதந்திரம் கொடுத்ததுடன் பல மீனவர்களை மீட்கவும் உறுதுணையாக நின்றார்.

நம்முடைய மீனவர்கள் இலங்கை அரசினால் தொடர்ந்து சிறை பிடிக்கப்படும் போது, நானும் அவர்களின் விடுதலைக்காக திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் அவர்களிடம் பேசும் போது, நமது மீனவர்களை கொஞ்சம் கைதாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள், நான் ஓவ்வொரு முறையும் நமது மீனவர்களின் விடுதலைக்காக இலங்கை அரசிடம் மடிப்பிச்சை கேட்பது போல கேட்கிறேன் என பலமுறை கூறியுள்ளார். பெற்ற தாய் தன் மகனுக்கு கஷ்டம் வரும்போது எப்படி துடிப்பாளோ அந்த உணர்வை, அந்த தாய் உள்ளத்தை திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் அவர்களிடம் நான் எப்போதும் கண்டுள்ளேன்.

இந்திய தமிழ் மீனவர்கள் சிறை பிடிப்பு, கைது, மரணம் என அவர்களின் குடும்பங்களின் துயரங்கள் குறித்து எந்த நேரத்திலும், ஏன் நடு இரவிலும் கூட அவருடன் பேசி இருக்கிறேன். அவரும் அடுத்தக்கட்டமாக என்ன செய்ய வேண்டும் என எனக்கு அறிவுரையும் வழங்கி இருக்கிறார்.

ஒரு அமைச்சர், ஒரு கட்சி தலைவர் என இவற்றிற்கெல்லாம் மேலாக தமிழர்களின் துயர் துடைத்த தாயாக அவரை நான் பார்க்கிறேன். தமிழர்களின் மனதில் அன்றைய இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே பற்றி எத்தகைய சிந்தனை இருந்ததோ, அதே உணர்வுடனே அவரை எதிர்கொண்டார். இத்தகைய மேன்மை கொண்ட ஒரு தாயை இழந்த துயரத்தை நான் அடைகிறேன். நான் ஏற்கனவே சொன்னது போல் அவரது இழப்பு கட்சிக்கும், நாட்டுக்கும் பேரிழப்பு என்பதை விட தமிழர்கள், குறிப்பாக மீனவ சகோதரர்கள் ஓவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையில் அவரது மறைவு ஓர் பேரிழப்பாக நான் கருதுகிறேன்.

தமிழர்களுக்கு, குறிப்பாக மீனவர்களுக்கு ஓர் தாயாக விளங்கிய திருமதி.சுஷ்மா ஸ்வராஜ் அவர்களை நாம் நன்றியுணர்வுடன் நினைவு கூர்ந்து அனைவரின் சார்பிலும் எனது மனப்பூர்வமான இதய அஞ்சலியை செலுத்துகிறேன்.

– பொன். இராதாகிருஷ்னன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe