ஆர்.கே.நகர் தொகுதியில் பண விநியோக முறைகேடு: உயரதிகாரிகள் இன்று ஆலோசனை

Published:

புது தில்லி:

ஆர்.கே. நகர் தொகுதியில், பண விநியோகம் தாராளமாக நடைபெறுவது குறித்தும் முறைகேடுகள் குறித்தும், அங்கு நடைபெறும் இடைத்தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாகவும் உயரதிகாரிகள் கொண்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் இன்று ஏற்பாடு செய்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  இந்தத் தேர்தலில் திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக அம்மா கட்சி சார்பில் தினகரன், அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் மதுசூதனன், சிபிம் சார்பில் லோகநாதன், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் தீபா, பாஜக சார்பில் கங்கை அமரன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில் தொகுதியில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.  கரகாட்டம், குத்தாட்டம், ஆடல், பாடல், ரெக்கார்ட் டான்ஸ் என களைகட்டியுள்ள இத் தொகுதியில், பணப்பட்டுவாடாவும் அதிகரித்துள்ளது. தங்கள் கட்சி வேட்பாளர் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று பதற்றத்தில் பண விநியோகம், பொட்டிக்கடைகளிலும் மளிகைக் கடைகள் மூலமாகவும் கூட நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக, டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வருமானவரித்துறை இயக்குநர், உள்துறைச் செயலாளர், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். தில்லியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு வீடியோ கான்பிரன்சிங் மூலம் தொடங்கும் இந்தக் கூட்டத்தில் ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா பிரச்னை முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img