துக்ளக் பத்திரிகை விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதனை தவிர்த்திருக்கலாம் எனவும், பரட்டை பற்ற வைத்துவிட்டார் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் ஒருவரது கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் அண்மையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் பொன்விழா ஆண்டுக் கூட்டத்தில் ரஜினி பேசிய பேச்சை திமுக.,வும் ஊடகங்களும் சர்ச்சை யாக்கின! ஏதோ பேசக் கூடாததை பேசியது போன்று, தீயில் நின்று மிதிபட்ட கால்களுடன் குதிக்கத் தொடங்கின. நிகழ்ந்த சரித்திரமாக இதழ்களில் நின்று பதிந்துள்ள உண்மைகளை மீண்டும் பேசுவது பெருங்குற்றமாக சிலர் பேச, சிலரோ அவ்வாறு நடக்கவே இல்லை என்று பொய்களை அடித்துக் கூறத் தலைப்பட்டனர்.
தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழித்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர் குறித்து ரஜினி தெரிவித்த வரலாற்று உண்மைக் கருத்துகளை எதிர்த்து சிலர் காவல் நிலையம் சென்றனர். நிகழ்ந்த உண்மைகளைப் பேசியதற்காக, ‘ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு வந்துள்ளன.
இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் அந்தக் கருத்தை பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும். பரட்டை பற்ற வைத்தது தமிழகம் முழுவதும் எரிந்து கொண்டிருக்கிறது… என்றார்.
ரஜினி சினிமாவில் நடித்த போது, பத்த வெச்சிட்டியே பரட்ட என்று கதாபாத்திரத்துக்கு ஏற்ப பேசிய வசனத்தை ரஜினி பேசியது போல் கூறுவது அமைச்சருக்கு அழகல்ல என்பது ஜெயக்குமாரின் மண்டையில் உறைக்க வேண்டும். ஒரு மத மக்களின் நம்பிக்கையை கேவலப் படுத்துவது போல் பேசி வரும், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசி வரும் கி.வீரமணி போன்றோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வக்கற்ற நிலையில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் ஆண்மையற்ற அதிமுக, அரசின் அங்கத்தினராக இருப்பதற்கு ஜெயக்குமார் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
ஒருவர் ஒரு கருத்தைப் பேசாமல் இருக்க வேண்டும் என்று ஒருவருக்கு அறிவுரை கூறும் அளவில், கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் வகையில் அமைச்சர் கூறுவது வெட்ககரமானது – என ஜெயக்குமாருக்கு சமூக வலைத்தளங்களில் ஜனநாயக ரீதியில் கருத்துச் சுதந்திரத்துடன் பதில் கொடுத்து வருகின்றனர்.
மேலும், மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் அரசு அனுமதிக்காது என்று மக்கள் விரும்பாத நிலையில் ஆட்சியில் அமர்ந்து கொண்டிருக்கும் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவது கேலிக்குரியது என்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில் ரஜினியின் பேச்சையெல்லாம் கண்டு கொள்ள தேவையில்லை. அவரை புறந்தள்ளி விடவேண்டும் என்று அடுத்த வருடம் தேர்தல் வரும் நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து கூறியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறது.