இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 ஆட்டம் வெல்லிங்டனில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியும் மூன்றாவது போட்டியைப் போலவே டை ஆனது. அதே போல் மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் தீர்மானிக்கப் பட்டு, அதிலும் இந்திய அணியே வெற்றி பெற்றது.
முன்னதாக, இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இன்றைய ஆட்டத்திலிருந்து விலகினார். எனவே, வில்லியம்சனுக்குப் பதிலாக டிம் செளதி கேப்டனாகச் செயல்பட்டார்.
டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. வில்லியம்சன், கிராண்ட் ஹோமுக்குப் பதிலாக டாம் ப்ரூஸ், டேரில் மிட்செல் ஆகியோர் நியூஸிலாந்து அணியில் சேர்க்கப்பட்டனர்.
இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப் பட்டன. ரோஹித் சர்மா, ஷமி, ஜடேஜாவுக்குப் பதிலாக சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றனர்.
தொடக்க வீரர்களாக ராகுலும் சஞ்சு சாம்சனும் களமிறங்கினர்.. 2ஆவது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த சஞ்சு சாம்சன், இன்னொரு சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு 8 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு கே.எல். ராகுல் சிக்ஸரும் பவுண்டரிகளும் அடித்து இந்திய அணியின் ஸ்கோரை நகர்த்தினார். அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்த கோலி, பென்னட் பந்துவீச்சில் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயஸ் ஐயர் 7 பந்துகளில் ஒரு ரன் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணிக்கு ஒரே நம்பிக்கையாக இருந்த கே.எல். ராகுல் சிக்ஸர் அடிக்க முயன்று 26 பந்தில் 39 ரன் எடுத்து, சோதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஷிவம் டுபே 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களில் சோதி பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்த ஓவரில் வாஷிங்டன் சுந்தர், சான்ட்னர் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார்.
12-வது ஓவரிலேயே பின்வரிசை வீரர் ஷர்துல் தாக்குர் விளையாட வந்தார். பாண்டே – தாக்குர் இருவரும் 17-வது ஓவர் வரை தாக்குப்பிடித்து ரன் சேர்த்தனர். 15 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 20 ரன் எடுத்த ஷர்துல் தாக்குர் பென்னட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மணிஷ் பாண்டே, இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். அவரால் தான் இந்திய அணி கெளரவமான ஸ்கோரைப் பெற்றது. இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்தது. மணிஷ் பாண்டே 36 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் சைனி 11 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தொடர்ந்து நியூஸிலாந்து அணி விளையாடியது. 166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசி அணி,யில் தொடக்க ஆட்டக்காரர் குப்டில் 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஆயினும் முன்றோ 47 பந்தில் 3 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் 64 ரன் எடுத்தார். அவருக்கு இணையாக 39 பந்தில் 57 ரன் எடுத்து டிம் செஃபர்ட் உறுதியாக நின்றார். பின் வந்த டாம் ப்ரூஸ் டக் அவுட் ஆனாலும், ரோஸ் டெய்லர் 24 ரன்னும் மிட்செல் 4 ரன்னும் எடுத்து, ஆட்டத்தை வெற்றியின் விளிம்புக்குக் கொண்டு சென்றனர். கடைசிப் பந்தில் மிட்செல் ஆட்டம் இழந்து வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டார். ஆயினும் 165 ரன் எடுக்கப்பட்டு போட்டி டை ஆகியிருந்தது.
இதை அடுத்து மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் விளையாடப் பட்டது. இதில் நியூஸிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 13 ரன் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி ஒரு விக்கெட் இழந்து 16 ரன் எடுத்து சூப்பர் ஓவரில் சூப்பராக வெற்றி பெற்றது. இதை அடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டித் தொடரை 4-0 என முன்னிலை பெற்றது.