சென்னை…கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக்காக தமிழக அரசு, தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பிசிஆர் கிட்களை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது. தற்போது முதல்கட்டமாக சனிக்கிழமை காலை 1 லட்சம் கிட்கள் தமிழக சுகாதாரத் துறைக்கு வந்து சேர்ந்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்று உள்ளதா என்பதை பிசிஆர் டெஸ்ட் மூலமே உறுதிபடுத்திக் கொள்ள முடியும். இந்த கிட் இருந்தால்தான் சளி மற்றும் ரத்த மாதிரி பரிசோதனைகளைச் செய்ய இயலும்.
இந்த கிட்கள் போதிய அளவு இல்லாததால் கொரோனா நோய்த் தொற்று பரிசோதனையை சுகாதாரத்துறை மேற்கொள்வதில் சுணக்கம் காட்டுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக தமிழ் தினசரி இணையதளத்திலும் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.
சமூக ஆர்வலரும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகருமான முனைவர் பொன்ராஜ், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்ததையும் தினசரி இணைய தளம் செய்தியாகப் பதிவிட்டிருந்தது.
மேலும் தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் வீடு வீடாகப் பரிசோதனை மேற்கொண்டால் மட்டுமே கொரோனா நோய்த் தொற்றின் உண்மை எண்ணிக்கையை கணக்கிட முடியும் என்று சுட்டி்க் காட்டப்பட்டது.
இந்நிலையில், பிசிஆர் டெஸ்ட் கிட்களுக்கு தமிழக அரசு சில தினங்களுக்கு முன் தென்கொரியாவிற்கு ஆர்டர் கொடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக சனிக்கிழமை அதிகாலை 1 லட்சம் பிசிஆர் கிட்கள் விமானம் மூலம் தமிழகம் வந்து சேர்ந்தது. இந்த கிட்கள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்துக்குச் சொந்தமான பண்டகச் சாலையில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த கிட்கள் தமிழக மருத்துவமனைகளுக்கு தேவையின் அடிப்படையில் பகிர்ந்து வழங்கப்பட்டு, பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொதுசுகாதாரத் துறை இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- சதானந்தன், சென்னை