ஆலய வழிபாட்டிற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடும் தமிழக அரசை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது என்று, இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
உடனடியாக கோவில்கள் திறக்க வலியுறுத்தி வருகின்ற ஜூன் 10ஆம் தேதி, பக்தர்களை ஒருங்கிணைத்து, கோவில் முன்பு ஒற்றைக் காலில் நின்று போராட்டம் நடைபெறும்..
கொரோனா தொற்று நோயால் உலகமே முடங்கியிருந்தது. பொருளாதாரம், வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகி மக்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதனைப் போக்கி, மக்களுக்கு நம்பிக்கை அளிக்க பாரதப் பிரதமர் அவர்கள், தொலைக்காட்சி வாயிலாக உரைநிகழ்த்தி ஊக்கப்படுத்தினார். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, கொரோனா நோயிலிருந்து தங்களைக் காத்துக்கொண்டு, குடும்பத்தினரையும் காத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அடுத்த கட்டமாக ஊரடங்கில் சில தளர்வுகளை ஏற்படுத்தி, மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள கேட்டுக் கொள்ளப்பட்ட நிலையில் தான், கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டன.
தொடர் ஊரடங்கால் மக்கள் மனங்களில் உள்ள அழுத்தம் குறைய ஆலய வழிபாடு அவசியம் என கடந்த மே 26ஆம் தேதி கோயில் முன்பு சமூக இடைவெளியோடு தோப்புக்கரணம் போடும் போராட்டத்தை இந்து முன்னணி நடத்தியது. இது மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.
அதன் காரணமாக தமிழக அரசு ஜூன் 3ஆம் தேதி அனைத்து மதத் தலைவர்களையும் அழைத்து கருத்து கேட்டது. விரைவாக வழிபாட்டுத் தலங்களை திறக்க முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதி கூறியது. ஆனால், கருத்து கேட்பு என்பது கண்துடைப்பு நாடகம் என்பது இப்போது வெட்ட வெளிச்ச மாகியுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு வழிபாட்டு தலங்களை ஜூன் 8ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டுடன் திறக்க அனுமதி அளித்தது. அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை, பிரசாதம் ஆகியன இல்லாமல் பொது தரிசனத்திற்கு அனுமதி அளிக்கலாம் எனக் கூறியது. அந்த நெறிமுறைகளின்படி இன்று புதுச்சேரி, கேரளா உட்பட பல மாநிலங்களில் கோவில்களில் சிறப்பான ஏற்பாடுகளை செய்து, மக்கள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன.
உலக புகழ்பெற்ற திருப்பதியில் வருகின்ற 11ஆம் தேதி முதல் தினசரி சில ஆயிரம் பேர் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசின் வழிகாட்டுத்தலின்படி ஆலயங்கள் திறக்க அனுமதிக்கவில்லை என்று கூறிவந்த தமிழக அரசு, மத்திய அரசு அனுமதி அளித்தும் ஆலயங்களைத் திறக்க அனுமதி மறுப்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.
இந்து ஆலய வழிபாடு என்பது கூட்டு வழிபாடு கிடையாது. அதனால், தனி நபர் இடைவெளி கடைப்பிடிப்பது, பொது சுகாதாரம் பேணுவது எளிதானது. காலை, மாலை வேளைகளில், 3 முதல் 4 மணி நேரம், சமூக இடைவெளிவிட்டு வரிசையில் நிற்க வைத்து முக்கிய சன்னதிகளில் மட்டும் தரிசனத்திற்கு அனுப்ப வழி ஏற்படுத்த முடியும்.
ஆனால், அரசுக்கு கோவில்களைத் திறக்க மனமில்லை. தமிழக அரசின் செயல்பாடுகள் தோல்வி அடைந்து வரும் நிலையில், அதனை மூடி மறைக்கவே அரசு, ஆலய திறப்பை தள்ளி வைக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது.
கோவில்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திற்கு வலிமையாக கொண்டு சேர்க்கும் வகையில் வருகின்ற ஜூன் 10 ம்தேதி புதன்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்கள் முன்பும், பொது மக்களையும் ஒன்றிணைத்து இந்து முன்னணி சார்பில் ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனைப் போராட்டம் நடைபெறும்.
தமிழகம் ஆன்மீக பூமி. இந்த ஆன்மீக பூமியிலே ஆலயங்களை நிரந்தரமாக இழுத்து பூட்ட நினைக்கின்ற எடப்பாடியார் அரசு, தவறை உணர்ந்து மனம் திருந்தி கோவில்களை உடனடியாக திறக்க வேண்டுமென்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது என்று அறிக்கையில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.