சென்னை: அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைக்கு இந்திய கம்யூ. ஆதரவு அளிப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், கிராமப்புறங்களில் பணிபுரிந்து வரும் அஞ்சல்துறை ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் 10ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் காரணமாக அஞ்சல் விநியோகம் நடைபெறாததால் உரியவர்களுக்கு, உரியகாலத்தில் கடிதங்களும், அஞ்சல்களும் கிடைக்கப் பெறாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 நாட்களாக நடைபெறும் அஞ்சல்துறை ஊழியர்களின் போராட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களின் கடிதப் போக்குவரத்துக்கு தனியார் துறைக்கு தள்ளிவிடப்படுகின்றனர். மத்திய அரசு ஊழியர் விரோதப்போக்கை உடனடியாக கைவிடவேண்டும். அஞ்சல்துறை இயக்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் கிராமப்புறப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணவும் ஊதியம், வேலை தொடர்பாக பரிசீலிக்க தனி நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்பதையும் ஏற்று போராட்டத்திற்கு தீர்வுகண்டு, கிராமப்புற அஞ்சல் பிரிவு மேம்பட்ட முறையில் செயல்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது என கூறப்பட்டுள்ளது.
அஞ்சல் ஊழியர் கோரிக்கைக்கு இ.கம்யூ. ஆதரவு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

