
ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை வந்ததுபோல் அருணாச்சலம் வருவார் என எதிர்பார்க்கிறோம்; பிஜேபி ஆட்சிக்கு வருவதற்குதான் அனைத்தும் செய்கிறோம் என்றார் மாநில பொது செயலாளர் சீனிவாசன்!
தமிழகத்தில் முதன் முறையாக மதுரை சோழவந்தானில் பிஜேபி சார்பில் விவசாயிகளுக்கான சேவை மையத்தை விவசாய அணியின் மாநில தலைவர் நாகராஜ் திறந்து வைத்தார். மையத்தின் பணிகளை மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து விவசாயம் தொடர்பான மத்திய அரசின் திட்டங்கள் குறித்து குறும்படம் திரையிடப் பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீனிவாசன் கூறியதாவது:-
100 நாள் வேலை திட்ட பணியாளர்களை முழுமையாக விவசாயத்திற்கு பயன்படுத்த மாநில அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். விவசாயிகள் சாத்தியார் அணையின் மூலம் முழுமையாக பயன்பெறவும், அணையை மேம்படுத்தி விவசாயம் செழிக்க போராடவும் தயங்கமாட்டோம்.
பிஜேபி ஆட்சிக்கு வருவதற்குதான் அனைத்தும் செய்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வருவதற்காக வாக்காளருக்கு குவார்ட்டரும், கோழிபிரியாணியும் கொடுத்து அவர்களை பிச்சைக் காரர்களாக மாற்றவில்லை. அவர்களுக்கு நல்லதை செய்து நல்லாட்சி புரிய தயாராகி வருகிறோம்.
ரஜினிகாந்த் பிஜேபிக்கு வரவேண்டும் என்பது எங்கள் ஆசை. ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை வந்தது போல் அருணாசலமும் ( ரஜினிகாந்த்) வருவார் என எதிர்பார்க்கிறோம் எனக் கூறினார்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை