"நம் தெய்வங்களை நாமே காப்பற்றிக் கொள்வோம்":-
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்- ராஜி ரகுநாதன்.
சமீபத்தில் வெளி நாட்டிலிருந்த வந்திருந்த ஒரு இளம் தம்பதிகளிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்கள் வருத்தத்துடன் கூறியதாவது:
“சமீபத்தில் நாங்கள் பக்தியோடு ஒரு பிரசித்தி பெற்ற பெரிய கோவிலுக்குச் சென்றிருந்தோம். நிறைய பேர் மணிக்கணக்காக தரிசனத்திற்கு காத்திருந்தார்கள். ஒருவன் எங்களிடம் வந்து கொஞ்சம் பணம் கொடுத்தால் சீக்கிரம் தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறினான். எங்களுக்கு வியப்பாக இருந்தது. ஒரு பக்கம் இது போன்ற லஞ்சமும் ஊழலும். இன்னொரு பக்கம் அரசியல் தலைவர்களின் அலட்டல்கள். மிகவும் பவித்திர பாவனையோடு கோயிலுக்குச் செல்கையில் அங்கு மோசடிகள், அசுத்தம்…! இன்னும் சில க்ஷேத்திரங்களில் பூஜாரிகள் பணம் கொடுத்தால் பிரத்யேக பிரசாதங்கள், தரிசனங்கள் ஏற்பாடு செய்கிறார்கள். பிரசாந்தம், அமைதி, நிர்மலமான பாவனை இவற்றுக்காக ஒரு தலத்திற்குச் சென்றால் அங்கு வெட்டுக்கிளி போலவும் அட்டைப்பூச்சி போலவும் மேலே விழுந்து பணம் பிடுங்கும் பண்டாக்கள்! இவ்விதம் புகழ் பெற்ற ஹிந்துக் க்ஷேத்திரங்கள் கிட்டத்தட்ட அனைத்துமே ஒரே மாதிரி உள்ளன. இங்கெல்லாம் செல்வதை விட வீட்டிலேயே தியானம் செய்வது பூஜை செய்வது மேல் என்று தோன்றிவிடுகிறது. இல்லாவிடில் நம் ஊரில் நம் வீட்டின் அருகில் இருக்கும் சின்ன கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து கொள்வது மேல்”.
அருகிலேயே இருந்த அவர்களின் தங்கை உடனே, “எது எப்படியிருந்தாலும் பிரசித்தி பெற்ற புண்ணிய க்ஷேத்திரங்களில் இயல்பாக இருக்கும் தெவீக சக்தி மிகச் சிறந்ததே!. அதற்காகத்தான் செல்கிறோம். சுற்றி நடப்பதைக் கண்டுகொள்ளக் கூடாது” என்று பதில் கூறினாள்.
அவர்கள் இருவரின் கூற்றிலும் உண்மை உள்ளது. இது இந்து சமுதாயம் ஆலோசிக்க வேண்டிய அம்சம்.
எங்கே பணமும் மக்களும் அதிகமாக சேருகிறார்களோ அங்கு வஞ்சகர்கள், பேராசைக்காரர்கள் சேருவது சகஜம். அது தெய்வமாகட்டும், வியாபாரமோ, கலை அரங்கமோ ஆகட்டும்.
ஒரு நிர்வாகம், ஆதாயம் என்று வந்தால் அவற்றைப் பார்த்துக் கொள்ளும் மனிதர்கள் தத்துவவாதிகள், யோகிகள், பக்தர்கள், சத் புருஷர்கள் ஆக இருக்க வேண்டும் என்று எண்ணுவது பேராசைதான்.
ஆனால், குறைந்த பட்சம் பவித்திரத் தன்மை, பிரசாந்தமான அமைதி – இவற்றை ஒரு தெய்வ நிலையத்திலிருந்து மக்கள் எதிர்பார்ப்பது மிகவும் இயல்பு. அதையாவது ஏற்பாடு செய்து தருவது ஆலய நிர்வாகிகளின் முக்கிய கடமை.
இதர மதங்களின் விசுவாச நிலையங்கள் அனைத்தும் நீதியோடு நடக்கின்றன என்று சொல்ல முடியாமல் இருக்கலாம். ஆனால் சாமானிய யாத்திரீகனுக்கு ஏமாற்றம் ஏற்படாத விதத்தில் அந்த விசுவாச கேந்திரங்கள் பணம் பிடுங்காத நிலையையும் சுத்தத்தையும் பாதுகாக்கின்றன.
இந்த விஷயத்தில் நம் பிரசித்தி பெற்ற க்ஷேத்திரங்கள், கோயில்கள் அனைத்தும் மிகவும் பின்தங்கி உள்ளன. வர வர இன்னும் கீழிறங்கி வருகின்றன. தளாரிகள், இடைத் தரகர்கள், மக்களின் மேல் விழுந்து கெஞ்சியோ, பயமுறுத்தியோ கொள்ளையடிக்கும் பிரத்யட்ச திருடர்கள். இவர்கள் ஆலய சுற்று வட்டாரத்தில் வௌவ்வால்களைப் போல் தொங்குகிறார்கள். கோயிலில் தெய்வ மூர்த்தியைத் தவிர வேறு எங்கும் நல்ல குணம் இல்லாத ஆலயங்களே அதிக அளவில் உள்ளன.
அனுஷ்டானம், சாஸ்திர விதிப்படி தெய்வ அர்ச்சனை – இவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், தம் கடமையை ஒதுக்கிவிட்டு, வரும் யாத்ரீகர்களிடமிருந்து எப்படி பணம் பிடுங்கலாம் என்று ஆலோசிக்கும் சில சூழ்ச்சிக்கார அர்ச்சகர்கள் மட்டுமின்றி, டிக்கெட் விற்பவர்கள், குமாஸ்தாக்கள், அதிகாரிகள்…யாரைப் பார்த்தாலும் அநீதியும் அக்கிரமமும் தலை விரித்தாடுகிறது. இப்படிப்பட்ட வெறுக்கத்தக்க ராட்சச அமைப்பு ஆலயங்களை ஆக்கிரமித்துள்ளது.
எத்தனையோ ஆசைகளோடும் ஆலயங்களின் மேல் மதிப்போடும் கௌரவத்தோடும் வரும் பக்தர்களுக்கு திவ்விய அனுபவங்கள் கிடைக்காமல் தீய அனுபவங்களே மீந்து விடுகின்றன. இன்னும் நம்பிக்கை இழக்காமல் சிரத்தை உள்ளவர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பக்தியோடு வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள். அவர்களின் பணத்தை, தெய்வ திரவியத்தை நல்ல வழியில் செலவிட்டு ஆலய அமைப்பின் தார்மீக வழிமுறைகளைக் காக்க வேண்டியது உடனடி கடமை.
ஆயின், ‘அநீதியும் அதர்மமும் எங்குதான் இல்லை?’ என்று வாதிப்பவர்களும் இல்லாமல் இல்லை. எங்கே இருந்தாலும் அவை தண்டனைக்குரியவையே. ஆனால் தர்மத்திற்கும் தெய்வத்திற்கும் வேறுபாடு கிடையாது. தெய்வம் என்றால் தர்மம், தர்மம் என்றால் தெய்வம் நினைவுக்கு வரும் கலாசாரம் நம்முடையது.
ஆலய நிர்வாகத்தில் அநீதிக்கும் அதர்மத்திற்கும் மற்றவற்றை விட அதிக காவலும் அதிக தண்டனையும் இருக்க வேண்டும். அதிலும் ஹிந்து மத்ததின் மீதும் புராதன சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்திய க்ஷேத்திரங்களின் மீதும் மிகவும் கௌரவத்தோடு உலகின் நாற்புறங்களிலிருந்தும் வந்து கொண்டிருக்கும் யாத்திரீகர்களின் முன்னிலையில் மிகவும் வெட்கப்பட வேண்டிய நிலமை ஏற்பட்டிருக்கிறது.
“இதனை எங்களால் தடுத்து நிறுத்த இயலவில்லை’ என்று நியாயமாக நடந்து கொள்ளும் நிர்வாகிகளே கை விட்டு விட்டார்கள். தெய்வ திரவியங்கள் ஸ்வாஹா ஆகிக் கொண்டிருந்தாலும் இருக்கும் கொஞ்ச நாட்கள் பிரத்யேக ஹோதாவை அனுபவித்து விட்டு பின்னால் ஓய்வு பெறப் போகிறோம். இந்த தொல்லைகள் எல்லாம் நமக்கெதற்கு? என்று தம் கடமை, பொறுப்புகளைக் கூட மறந்து விடுகிறார்கள். மிகவும் படித்த மேதாவிகளான, அறிஞர்கள் தாங்கள் மட்டும் நீதிமான்களாக இருந்து விட்டால் போதாது. தம்மைச் சுற்றி உள்ள அநீதியைத் தடுத்து நிறுத்தும் முயற்சியைச் செய்யாவிட்டால் அவர்களும் அநீதிமான்களே ஆவார்கள்.
இதில் அனைத்தும் ஆலய நிர்வாகிகளின் பொறுப்பே என்று விட்டு விலகி விட முடியாது. பக்தர்களும், சிரத்தை உள்ளவர்களும் இவற்றைத் தட்டிக் கேட்க வேண்டும். எங்காவது சிறிதளவு கடமை தவறுவது தென்பட்டாலும் பக்தர்கள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக எதிர்த்து தவறைச் சுட்டிக் காட்டி, அநீதியை வெளிப்படுத்தி அவர்களுக்கு புத்தி புகட்டி அதிகாரிகளை அசைக்க வேண்டும். குடியாட்சி நாட்டில் இது சாத்தியமே!.
நம் தெய்வங்களையும், ஆலயங்களையும் அதர்மிகளான அசுர சக்திகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதே உண்மையான வேண்டுதல், உண்மையான வழிபாடு. சாஸ்திர சிறப்புகள் கொண்ட அற்புதமான தீர்த்தங்களும், க்ஷேத்திர புகழ் உள்ள தெய்வீகம் நிரம்பிய நம் ஆலயங்களும் அவமானத்திற்கு உள்ளாகாமல் காப்பாற்றி பாதுகாத்துக் கொள்வதற்கு நம் எல்லைக்குள் நாம் முயற்சிக்கலாமே!


