விவேக் மாதிரி யாரும் செய்ய மாட்டங்க: வைரலாகும் குமரிமுத்துவின் வீடியோ பதிவு!

Published:

kumari muthu
kumari muthu

தனது மகள் திருமணத்துக்கு விவேக் செய்த உதவி குறித்து, கண்ணீர் மல்க குமரிமுத்து தெரிவித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். நேற்று (ஏப்ரல் 16) காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

விவேக்கின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அவருக்கு எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

பலரும் விவேக்கின் காமெடி காட்சிகள், ட்வீட்கள், பேச்சுகள் எனப் பகிர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதில் பலருடைய பகிர்வில் இடம்பெற்றுள்ளது நடிகர் குமரிமுத்துவின் பேட்டி தான். 2016-ம் ஆண்டு குமரிமுத்து காலமாகிவிட்டாலும், அவருடைய பழைய பேட்டியில் தனது மகள் திருமணத்தின் போது விவேக் செய்த உதவி குறித்து கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

குமரிமுத்துவின் இந்த வீடியோ பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் குமரிமுத்து கூறியிருப்பதாவது:

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

“நான் துணிந்து சொல்வேன், எந்தவொரு நகைச்சுவை நடிகர் என் மீது கோபப்பட்டாலும் பரவாயில்லை. இதை நடிகர் செந்திலிடம் கூட தெரிவித்துள்ளேன். எனது கடைசி மகள் திருமணத்துக்கு கையில் பணமில்லை. தம்பி விவேக்கிடம் சென்று இலங்கையில் ஒரு நாடகத்துக்கு அழைக்கிறார்கள். நான் சென்றால் என் பெண் திருமணத்துக்காக 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்றேன். எனக்கு என்ன கிடைக்கும் என்றார். உடனே 2 லட்ச ரூபாய் வாங்கி தருகிறேன் என்றேன். சரி அண்ணா, நான் வருகிறேன் என்றார்.

விமான டிக்கெட், 5 ஸ்டார் ஹோட்டலில் ரூம் எல்லாம் போட்டுவிட்டேன். நாடகம் எல்லாம் முடிந்தவுடன் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். விவேக் சார் அறையைக் காட்டுங்கள் என்றார்கள், உடனே அழைத்துச் சென்றேன். அப்போது நடந்த சம்பவத்தால், என் வாழ்க்கையில் சந்தோஷத்தில் அழுதது அன்று தான்.

விவேக்கின் சம்பளமான 2 லட்ச ரூபாயை அவருடைய கையில் கொடுக்கிறார்கள். அதை அப்படியே வாங்கி, “அண்ணே.. இந்தாங்க அண்ணே. 2 லட்ச ரூபாயை வைத்துக் கொள்ளுங்கள். உங்க பொண்ணு கல்யாணத்துக்கு கஷ்டப்படுகிறேன் என்றீர்களே. உங்களுக்கு 50 ஆயிரம் கொடுத்துவிட்டார்களா. பொண்ணு கல்யாணத்தை நல்லபடியாக நடத்துங்க அண்ணே” என்றார். (அழுது கொண்டே) என் வாழ்க்கையிலேயே கலைவாணருக்குப் பிறகு அவன் ஒருவன் தான் நடிகன். அவன் தான் மனுஷன்” இவ்வாறு குமரிமுத்து தெரிவித்துள்ளார்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Related articles

Recent articles

spot_img