வேலைக்கு செல்லாதது குறித்து பெற்றோர் திட்டியதால் இளைஞர் 50 அடி உயர தண்ணீர் தொட்டியிலிருந்து குதித்தும் உயிர் தப்பினார்.
ஈரோடு கலைவாணர் வீதி பகுதியில் சண்முகசுந்தரம் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் குமரகிரி(35).
பட்டதாரியான இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து ஊர் சுற்றி வந்துள்ளார். வேலைக்கு செல்லாததது குறித்து அவரது தாய் மற்றும் தந்தை திட்டியுள்ளனர்.
தொடர்ந்து இதுபோல் நடப்பதால் மனமுடைந்த குமரகிரி மது அருந்திவிட்டு பாரதி தியேட்டர் சாலையில் உள்ள 50 அடி உயர மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் ஏறி அங்கிருந்து குதிக்கப் போவதாக சத்தமிட்டார்.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகுதி என்பதால் இதனை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உடனடியாக இதுகுறித்து ஈரோடு வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால், காவல்துறையினர் வருவதற்கு முன்பாகவே குமரகிரி அங்கிருந்த கீழே குதித்தார். எனினும் உயிர் தப்பிய அவருக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இளைஞர் தற்கொலைக்கு முயன்றது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
50 அடி உயரத்தில் இருந்து குதித்த நபர் உயிர் தப்பியது குறித்து அப்பகுதிமக்கள் ஆச்சரியத்துடன் பேசி வருகின்றனர்