தமிழகத்தில் சோழ மண்டலத்தில் அமைந்துள்ள தொன்மை மிகு நகர்களுள்ஒன்றான திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழி தேரோட்டம் நாளளை மார்ச் 15இல் காலை கோலாகோலமாக துவங்குகிறது.


தமிழகத் திருக்கோவில்களில் இக்கோவில் மிகவும் தொன்மையானதாகும். இத்திருக்கோவிலுக்கு மேலும் பெருமை சேர்க்கும் அம்சமாக பிரதானமானது ஆழித்தேராகும். தமிழகத்திலுள்ள தேர்களில் திருமுறையில் பாடப்பெற்ற பெருமை இத்திருக்கோவிலின் தேருக்கு மட்டுமே உள்ளது. இத்தேரானது இதர திருக்கோவில்களின் தேர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலின் ஆழித்தேர் ஆண்டுதோறும் பங்குனி உற்சவ பெருவிழாவின் நிறைவாக நடைபெற்று வருகிறது. இத்தேர்விழாவானது கடந்த 25.03.2021 ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு நாளை 15.03.2022 அன்று ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடத்தப்படவுள்ளது.
இதற்காக திருவாரூரில் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்றது. மார்ச் 15ஆம் தேதி தேரோட்டம் நடக்கிறது. பிரம்மாண்ட ஆழித்தேர் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. உயர்ரக மரங்களால் 36 அடி உயரத்தில் நிலையாக அமைக்கப்பட்டுள்ள 5 அடுக்குகளை கொண்ட பீடத்தின் மீது மூங்கில் மற்றும் பனமர துண்டுகளை கொண்டு தேர் கட்டுமானப் பணிகள் இரவு பகலாக நடைபெற்றது .ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை ஆழித்தேருக்கு உண்டு. அலங்கரிக்கப்படாத இந்த தேரின் உயரம் 30 அடி, அகலம் 30 அடி ஆகும். தேரின் விமான பகுதி வரை தேர் சிலைகளால் அலங்கரிக்கப்பட்ட பகுதி 48 அடி, விமான கலசம் 12 அடி என மொத்தம் 96 அடி உயரத்துடன் ஆழித்தேர் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும். திருவாரூர் ஆழித்தேர் இதர கோவில்களின் தேர்களில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டது. 24½ அடி நீளம், 1½ அடி உயரம் கொண்ட 2 இரும்பு அச்சுக்கள், 9 அடி விட்டமும், 1½ அடி அகலமும் உடைய 4 இரும்பு சக்கரங்கள் என தேரின் பிரம்மாண்டம் வியக்க வைக்கிறது.
தேரின் மேல் கலை பொக்கிஷங்கள் ஏராளமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. எண் கோண வடிவமாக அமைந்துள்ள தேர், குறுக்கு வெட்டு தோற்றத்தில், 20 பட்டைகளாக காணப்படும்.
திருச்சி பெல் நிறுவனம் சார்பில் இரும்பு அச்சுகள், 4 இரும்பு சக்கரங்களுடன் எளிதில் நிறுத்தும் வகையில் ஹைட்ராலிக் பிரேக் தேரில் பொருத்தப்பட்டு உள்ளது. மரத்தேரின் எடை 220 டன். இதன் மீது பனஞ்சப்பைகள் 5 டன், மூங்கில் 50 டன், சவுக்கு 10 டன், கயிறு ஒரு டன், துணிகள் ½ டன், தேரின் முன்புறம் கட்டப்படும் 4 குதிரைகள், யாளி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட நிலையில் தேரின் மொத்த எடை 300 டன்னாகும்.
தேரை இழுக்க சுமார் 21 அங்குலம் சுற்றளவு கொண்ட 425 அடி நீளம் கொண்ட 4 வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் எடை 4 டன். அஜபா நடனத்துடன் கோவிலில் இருந்து தியாகராஜர் புறப்பட்டு தேரில் எழுந்தருள்வார். ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம் பக்தர்களிடம் நிலவுகிறது.
இந்த சிறப்புமிக்க ஆழித்தேராட்டம் நாளை மார்ச் 15இல் நடைபெறுகிறது. முன்னதாக நாளை காலை 5 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து 8.10 மணிக்கு ஆழித்தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்ட விழா நடைபெறுகிறது. ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்மந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பெருமைகளை கொண்ட ஆழித்தேர் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.நாளை நடைபெற உள்ள தேரோட்டத்தைகாணவும் தேர் இழுக்கவும் திருவாரூரில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.




