ராசிபுரம் விருதுநகரில் அடுத்தடுத்து காதல்ஜோடிகள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்திப்பலகானூர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் சூர்யா ( 21). இவர் அத்திப்பலகானூர் அருகே ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் கடந்த 5 வருடமாக வேலை பார்த்து வந்தார்.
இவர், ராசிபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் சூர்யா கோழிப்பண்ணைக்கு வேலைக்கு சென்றார். அங்கு பெருச்சாளிகள் புகுந்து கோழிகளை கொன்று விடுவதால் அதனை தடுப்பதற்காக நிலத்தில் மின்கம்பி வைத்து, அதில் மின்சாரம் பாய்ச்சுவது வழக்கம். அந்த மின்கம்பியில் சூர்யா எதிர்பாராமல் மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி சூர்யாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அவசர அவசரமாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை அறிந்த அவரது உறவினர்கள், ராசிபுரம் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.
இதனிடையே காதலன் சூர்யா மின்சாரம் தாக்கி பலியானதை அறிந்த அவரது காதலி கடும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது அவருக்கு பேரிடியாக அமைந்தது. இதனால் நேற்று அவர் பள்ளிக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இருவரும் கடந்த ஒரு வருடமாக தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் காதலன் மறைவை, அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை. காதலனின் அன்பு, பாசம் என பழைய நினைவுகளை நினைத்து கதறி அழுதார்.
இதனால் மனமுடைந்த மாணவி மாலை 6 மணியளவில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார், அங்கு சென்று மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இது குறித்து அவரது தந்தை, எனது மகள் காதல் காரணமாக தற்கொலை செய்யவில்லை. அவர் வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் அருகே, சோலை மணி(20) என்ற பெண்ணும் பிரவீன் குமார் என்பவரும் காதலித்து வந்தனர். தனியார் மருத்துவமமையில் செவிலியராக பணியாற்றி வந்த சோலை மணி (20) என்ற பெண் திங்கட்கிழமைரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்தார். காதலியின் இறப்பை தாங்கமுடியாமல், காதலன் பிரவின் குமார் (28), தானும் ஒரு தற்கொலை கடிதம் எழுதி அதை வாட்ஸ் அப் பக்கத்தில் பதிவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார்.பலத்தகாயமடைந்த அவர் மதுரை அரசுமருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





