பீகாரில் கொள்ளையர்கள் 500 டன் எடை கொண்ட இரும்பு பாலத்தை வெட்டி எடுத்து அலேக்காக தூக்கி சென்றனர்.
பாலத்தையே ஒருகும்பல் வெட்டி எடுத்து சென்ற சம்பவம் பீகார் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தில் ரோக்தாஸ் மாவட்டம் சாசரத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் அமியாவார் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள கால்வாயின் குறுக்கே 45 ஆண்டு கால பழமையான இரும்பு பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. 69 அடி நீளம் கொண்ட இந்த பாலம் முற்றிலும் இரும்பினால் ஆனது. இதன் அருகே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.
புதிய பாலம் கட்டப்பட்டதால் இரும்பு பாலத்தை வெட்டி எடுத்து அதனை பணமாக்க கொள்ளை கும்பல் திட்டமிட்டது. இதற்காக என்ன செய்யலாம் என அவர்கள் யோசனை செய்தனர். கியாஸ்கட்டர் மூலம் பாலத்தை அப்படியே வெட்டி எடுக்க முடிவு செய்தனர். இதையடுத்து கொள்ளையர்கள் புல்டோசர், கியாஸ் கட்டர்களுடன் அங்கு சென்று கொஞ்சம், கொஞ்சமாக பாலத்தை வெட்டி எடுக்கும் முயற்சியில் இறங்கினார்கள். இப்படி 500 டன் எடை கொண்ட இரும்பு பாலத்தை வெட்டி எடுத்து அலேக்காக தூக்கி சென்று விட்டனர்.
திடீரென இரும்பு பாலம் மாயமானதை கண்டு அக்கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொள்ளையர்கள் ஒரேநாளில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபடவில்லை என்றும், பலநாட்கள் தொடர்ச்சியாக அவர்கள் பாலத்தை கியாஸ் கட்டர்கள் மூலம் வெட்டி இந்த புதுவகையான கொள்ளையை செய்ததும் தெரியவந்தது.
மேலும் நடந்த விசாரணையில் இந்த கொள்ளை பட்டபகலில் தான் நடந்துள்ளது. சிலர் இந்த பாலத்தை சிலர் கழட்டிக்கொண்டிருக்கும்போது பார்த்துள்ளனர். அவர்கள் கனரக வாகனம் ஜேசிபி ஆகிய வாகனங்களுடன் வந்து பாலத்தை கழட்டி அலேக்காக எடுத்து சென்றுள்ளனர்.பாலத்தை கழட்டும் போது மக்கள் கேள்வி கேட்ட போது அவர்கள், தாங்கள் நீர்வள ஆதார அமைப்பில் பணியாற்றுவதாகவும், அதிகாரிகளின் உத்தரவுபடியே பாலத்தை கழட்டுவதாகவும் பொய் கூறியுள்ளனர். இந்த பாலம் கொள்ளையர்களால் காணாமல் போன விஷயம் மறுநாள் காலையில் தான் ஊர் முழுவதும் தெரிந்துள்ளது. கொள்ளையர்கள் ஒரு இரும்பு பாலத்தையே அலேக்காக திருடிய சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த ஆண்டு ரூ.200 கோடி மதிப்புள்ள மணல்களை சாசரம் மாவட்டத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த மாபியா கும்பல் தான் இந்த கொள்ளையினை அரங்கேற்றி இருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர்.அவர்களை போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.எது எப்படியோ நகை கொள்ளை பணம் கொள்ளை சம்பவத்தை கேள்விப்பட்ட மக்கள் பாலம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.





