அன்மையில் விருதுநகரில் நடந்த கூட்டு பாலியல் வழக்கில் புதிய திருப்பமாக இளம்பெண் தன்னை கட்டாயப்படுத்தியதாக ஜாமினில் வெளிவந்த சிறுவன் புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகரில் 22 வயது இளம்பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜுனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் நான்கு சிறுவர்கள் என எட்டு பேர் கடந்த மார்ச் 19ல் கைது செய்யப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி., விசாரித்து வரும் இவ்வழக்கில், மதுரை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த நான்கு சிறுவர்களும் ஜாமினில் வெளிவந்தனர்.
அவர்களில் ஒருவர் தமிழக முதல்வர், போக்சோ நீதிமன்ற நீதிபதி, கலெக்டர், எஸ்.பி, உயர் நீதிமன்ற பதிவாளர், உள்துறை செயலர், ஐ.ஜி., – டி.ஐ.ஜி., குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட சட்ட உதவி மைய தலைவர் ஆகியோருக்கு புகார் அனுப்பியுள்ளார்.
புகார் மனுவில் சிறுவன் கூறியிருப்பதாவது,
ஹரிஹரன் மூலம் இளம்பெண் எனக்கு பழக்கமானார். சிறுவர்களான எங்களை அந்த இளம்பெண் வெவ்வேறு நாட்களில் தனித்தனியாக அழைத்து கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்தார்.வெளியில் கூறினால் வாழ்க்கைக்கும் படிப்புக்கும் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி எங்களை மிரட்டினார்.
போலீசார் எங்களை கைது செய்தபோது விபரத்தை கூறினேன். இளம்பெண் மொபைல் போனை பார்த்தால் உண்மை தெரியும் என்று கூறினேன். ஆனால் போலீசார் எங்களை கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு சென்ற பின் அவர்களிடமும் தெரிவித்தேன்.
அவர்களும் அதை ஏற்று கொள்ளவில்லை. அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கூர்நோக்கு இல்லத்தில் இருந்தபோது, இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் வெளியே வந்தேன். என்னை கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த இளம்பெண் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் குறிப்பிட்டுள்ளார்.
மீதமுள்ள மூன்று சிறுவர்களில், இரண்டு பேரும் இதுபோன்று மனு அனுப்பி உள்ளனர். இளம்பெண் பலாத்கார வழக்கில் கைதான ஹரிஹரன், பிரவீன், மாடசாமி, ஜுனத் அகமது ஆகியோரது சிறை காவல் மே 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவர்கள் அனுப்பிய இந்த புகார் மனு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





