தமிழகத்தில் வரும் மே 8-ம் தேதி சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் சுமார் ஒரு லட்சம் இடங்களில் நடைபெற உள்ளதாக இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
அவர் கூறியதாவது,
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் தலை தூக்க தொடங்கியுள்ளது. தொற்று ஏற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வடமாநிலத்தில் இருந்து இங்கே பணியாற்ற வந்த தொழிலாளர்கள் என்பது தெரியவந்தது. எத்தனை பேர் வந்துள்ளனர் என்கிற விவரத்தை கட்டுமான நிறுவனங்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் தெரிவிக்க வேண்டும்.
அரசு மருத்துவமனை சார்பில் உடனடியாக ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படும். அங்கிருந்து வருபவர்கள் மூலம் தொற்று பரவக் கூடாது என்பதே அரசின் நோக்கம். முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தொற்று தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் 1.46 கோடி பேர் 2-வது தவணையும், 50 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளவில்லை. இதை மனதில் வைத்து, இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் வரும் மே 8-ம் தேதி சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் சுமார் ஒரு லட்சம் இடங்களில் நடைபெற உள்ளது.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை தனித்தனியாக சந்தித்து அருகில் உள்ள முகாம்களில் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.





