அட்சய திருதியை நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது.
அட்சய திருதியை தினத்தன்று நகை மட்டுமல்லாமல் எந்தப்பொருளையும் வாங்கலாம். ஆனால் நகைதான் பிரதானமாக வாங்கப்படுகிறது.
நேற்று தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நகைகடைகளில் தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்களை வாங்க காலையில் இருந்தே பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
சென்னையிலும் நேற்று அதிகாலை முதலே நகைக்கடைகளில் விற்பனை நடைபெற தொடங்கியது. வாடிக்கையாளர்களை கவர பல்வேறு சலுகைகளும், தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டிருந்தன.
கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் இருந்ததை விட தற்போது ஒரு பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 424-ம், கிராமுக்கு ரூ.303-ம் விலை அதிகரித்து உள்ளது. பொதுமக்களின் ஆதரவை பொறுத்து நள்ளிரவு வரை கடைகள் திறந்து வியாபாரம் செய்யப்பட்டன. .
அட்சய திருதியை நாளில் நகை வாங்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புவதால் அவர்கள் தகுதிக்கு தகுந்தார் போன்று 2 கிராம் முதல் 10 பவுன் வரை நகைகளை வாங்கி சென்றனர்.
இதனால் வியாபாரிகள் எதிர்பார்த்தது போன்று வியாபாரம் நடந்தது. நேற்று ஒரேநாளில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் 18 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நகைக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் நிறைந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்