கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களின் தோல் மஞ்சள் நிறத்திலும், உள்ளே சதைப்பகுதி வெள்ளை நிறத்திலும் இருக்கும்.
இதை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படும் என்பதால் இந்த முறையில் பழுக்க வைப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.
ஆனாலும், குறுகிய காலத்தில் விற்று லாபம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், காய்களை செயற்கையாக பழுக்க வைக்கும் வியாபாரிகள் சிலர் கார்பைடு கல் மூலம் மக்களின் உயிரோடு விளையாடுகின்றனர்.
இது குறித்து மதுரை வேளாண் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் மற்றும் உதவி பேராசிரியர் வள்ளல் கண்ணன் ஆகியோர் கூறியதாவது: “தமிழ்நாடு வேளாண் பல்கலை ‘எத்திரல்’ என்ற வளர்ச்சி ஊக்கியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பெயரில் பல்வேறு நிறுவனங்கள் திட மற்றும் திரவ வடிவில் இதை தயாரிக்கின்றனர். வாழைப்பழத்திற்கு திட வடிவிலும், மாம்பழங்களுக்கு திரவ வடிவிலும் பயன்படுத்தலாம்.
ஒரு லிட்டர் தண்ணீரில் 100 மில்லி ‘எத்திரல்’ திரவம் கலந்து, அதில் ஒவ்வொரு மாங்காயையும் 10 வினாடி மூழ்க வைத்து எடுத்தால் 2 நாட்களில் முழுவதுமாக இயற்கை முறையில் பழுத்துவிடும். சதைப் பகுதியும் பழமாகிவிடும். உடலுக்கு கெடுதல் இல்லை. இதை பயன்படுத்துவது நல்லது” என்றனர்.