
மஹாராஷ்டிராவில் வணிக குழுமம் ஒன்றில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.56 கோடி பணம்,32 கிலோ தங்கம், வைரம், முத்து நகைகளும், சில முதலீடு பத்திரங்களும் உள்ளிட்ட ரூ.100 கோடி மதிப்பிலான சொத்து பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் ஜால்னாவில் உள்ள இரும்பு, ஆடை மற்றும் கட்டுமான தொழில்கள் அடங்கிய வணிக குழுமம் ஒன்று வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலை அடுத்து வருமான வரித்துறை திடீரென சோதனை மேற்கொண்டனர். இந்த வணிக குழுமத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சுமார் 260 வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையை துவங்கினர்.
இதில் அலுவலகம் ஒன்றில் இருந்து சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வருமானத்தை மறைத்து வாங்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.இந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளில் ரூ.56 கோடிக்கு கட்டுகட்டாக பணமும், 32 கிலோ எடையுள்ள தங்கம், வைரம், முத்து நகைகளும், சில முதலீடு பத்திரங்களும் இருந்தன.
பணத்தை எண்ணி முடிக்கவே அதிகாரிகளுக்கு 13 மணி நேரம் ஆனதாம்.இவ்வளவு இடங்களில் ஒரே நேரத்தில் 260 அதிகாரிகள் சோதனையில் இறங்கியதும், அதில் கட்டுகட்டாக இவ்வளவு பணம் உள்ளிட்ட சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதும் அம்மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.




