பரிகார பூஜை நடத்தி 55 பவுன் நகை, ரூ.1½ லட்சம் மோசடி செய்த பெண் மந்திரவாதி..

Published:

500x300 1805350 woman - 2026
பெண் மந்திரவாதி

படித்தவர்கள் அதிகமாக உள்ள கேரளாவில் பரிகார பூஜை நடத்தி 55 பவுன் நகை, ரூ.1½ லட்சம் மோசடி செய்த பெண் மந்திரவாதியை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவனந்தபுரம் வெள்ளயாணி பகுதியை சேர்ந்தவர் விஸ்வாம்பரன் (65). இவருடைய குடும்பத்தில் சிலர் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இதனால் விஸ்வாம்பரன் மனமுடைந்த நிலையில் இருந்தார். இதனால் அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஜோதிடரை நேரில் சென்று பார்த்துள்ளார். அப்போது சில பரிகார பூஜைகள் நடத்த வேண்டும் என அந்த ஜோதிடர் கூறியுள்ளார். மேலும் குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள தெற்றியோடு தேவி என அழைக்கப்படும் வித்யா என்ற பெண் மந்திரவாதி இருக்கிறார்.

அவர் பரிகார பூஜை நடத்துவார் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு விஸ்வாம்பரன் களியக்காவிளை சென்று பெண் மந்திரவாதி வித்யாவை சந்தித்தார். அப்போது நான் நேரடியாக வீட்டுக்கு வந்து பரிகார பூஜை நடத்துகிறேன் என்று வித்யா கூறியுள்ளார். அதன்படி சில நாட்கள் கழித்து விஸ்வாம்பரனின் வீட்டுக்கு வந்த வித்யா, கடுமையான சாப தோஷம் இருப்பதால் வீட்டில் வைத்து தொடர்ந்து பரிகார பூஜை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

பின்னர் வீட்டிலேயே ஒரு அறை பூஜை அறையாக மாற்றப்பட்டது. ஒரு வாரத்திற்கு மேல் வித்யாவும், அவருடன் வந்தவர்களும் சேர்ந்து பூஜை நடத்தினர். ஒரு கட்டத்தில் தேவியின் சாபம் குறையவில்லை என கூறிய வித்யா, வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை வைத்து பூஜை நடத்த வேண்டும் என்றார். அதை நம்பிய விஸ்வாம்பரனின் குடும்பத்தினர் வீட்டில் இருந்த 55 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சத்தை கொடுத்துள்ளனர். அவற்றை பூஜை அறையில் உள்ள பீரோவில் வைத்து விட்டு செல்லும்படி வித்யா கூறியுள்ளார். பூஜையை முடித்ததும் 2 வாரம் கழித்து தன்னிடம் தெரிவித்து விட்டு பீரோவை திறந்து நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொள்ளும்படி கூறிவிட்டு வித்யா அங்கிருந்து சென்றார்.

2 வாரங்கள் கழிந்ததும் வித்யாவை விஸ்வாம்பரன் தொடர்புகொண்டு பீரோவை திறக்கலாமா? எனறு கேட்டுள்ளார். தேவியின் சாபம் இன்னும் குறைவில்லை என்றும், 3 மாதம் கழித்து தான் பீரோவை திறக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதன்படி 3 மாதமும் கழிந்தது. பின்னர் கேட்டபோது ஒரு வருடம் கழித்து திறக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் விஸ்வாம்பரனுக்கு சந்தேகம் உருவானது. உடனே அவர் பூஜை அறைக்கு சென்று பீரோவை திறந்து பார்த்தார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

அப்போது அதில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த விஸ்வாம்பரன் உடனடியாக வித்யாவை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார். அப்போது போலீசில் புகார் செய்தால் குடும்பத்தையே கொலை செய்து விடுவேன் என்று வித்யா மிரட்டியுள்ளார். எனினும் மிரட்டலுக்கு பயப்படாத விஸ்வாம்பரன் இது குறித்து திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் மந்திரவாதி வித்யா மற்றும் அவருடன் வந்தவர்களை தேடி வருகின்றனர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img