இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 நேரத்தில் புதிதாக 268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 157 ஆக இருந்தது. நேற்று 188 ஆக உயர்ந்த நிலையில், இன்று 2-வது நாளாக பாதிப்பு அதிகரித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 77 ஆயிரத்து 915 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 182 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 43 ஆயிரத்து 665 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 3,552 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 84 அதிகமாகும். தொற்று பாதிப்பால் நேற்று மகாராஷ்டிராவில் மட்டும் ஒருவர் இறந்துள்ளார். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 1-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,698 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை தினசரி பரிசோதனை 1 லட்சத்துக்கும் குறைவாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பரிசோதனை 1.34 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. நேற்று 2,36,919 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து விமானத்தில் கோவை வந்த 166 பயணிகள் கண்காணிப்பு ..
கோவை சர்வதேச விமானநிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் 167 பயணிகள் வந்து இறங்கினர்.
சீனா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க அதிதீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சீனாவில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய அனைத்து விமான நிலையங்களிலும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கோவை சர்வதேச விமானநிலையத்திலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் 167 பயணிகள் வந்து இறங்கினர். அவர்களில் சேலத்தை சேர்ந்த பயணி ஒருவரின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது அவர் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை விமானநிலையம் வந்ததும், அவரை போன்று மற்றொருவரும் சீனாவில் இருந்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இவருக்கு கோவை விமானநிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு நேற்று வந்தது. அதில் சேலத்தை சேர்ந்த பயணிக்கு கொரோனா உறுதியானது. மேலும் இவருக்கு எந்தவகையான கொரோனா என்பது குறித்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்து சேலம் மாவட்ட சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கொரோனா பாதிப்புக்குள்ளானவரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் அவருடன் விமானத்தில் கோவை வந்த 166 பயணிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்களிடம் தனிமைப்படுத்தி கொள்ளவும் கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளனர்.





