
- பழனி முருகப்பெருமானுக்கு சொந்தமான 220 ஏக்கர் நிலத்தை திருட முயற்சி.
- விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து விவசாயத் தொழிலை விட்டு வெளியேறும் நிலை உருவாகும்
- ஒரு அங்குலம் நிலத்தை கூட விட்டுத் தர மாட்டோம்
- — மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்
பழனி முருகப்பெருமானுக்கு சொந்தமான 220 ஏக்கர் நிலத்தை திருட முயற்சி நட்பதாகக் குறிப்பிட்டுள்ள இந்து முன்னணி இயக்கம், இது தொடபில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கோயில்களில் ஆறு கால பூஜைகள் சிறப்பாக நடைபெற வேண்டும், கோவில் திருவிழாக்கள் எந்தவித குறையும் இன்றி விமர்சையாக நடத்தப்பட வேண்டும், மக்களின் பசி போக்குகின்ற அன்னதானம் வழங்கப்பட வேண்டும். கலை, கலாச்சாரம், பசு பாதுகாப்பு , விவசாயம் உள்ளிட்ட பல்வேறு நற்பணிகளுக்காக தங்களது நிலங்களை கோவில்களுக்காக பக்தர்கள் தானமாக கொடுத்தார்கள்.
அந்த வகையில் பழனி முருகன் கோவிலுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை பக்தர்கள் தானமாக வழங்கியுள்ளனர். அதில் ஒரு பகுதியாக ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள கள்ளிமந்தயம் கிராமத்தில் 220 ஏக்கர் விவசாய நிலம் பழனி முருகப் பெருமானுக்கு சொந்தமானது. இந்த நிலத்தில் கோ சாலை அமைக்கப்பட்டு பக்தர்கள் தானமாக வழங்கும் பசுக்களை வைத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பராமரித்து வரப்படுகிறது.
தற்போது முருகப்பெருமானின் நிலத்தை அபகரிக்க தமிழக அரசு சூழ்ச்சி செய்து வருகிறது. 1200 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கிறோம் என்ற பெயரில் கோசாலை அமைந்துள்ள பழனி முருகனுக்கு சொந்தமான நிலம் 220 ஏக்கர் உட்பட சுற்றியுள்ள கள்ளிமந்தயம், தேவத்தூர், சிக்க நாயக்கன்பட்டி, விவசாய நிலங்கள் சுமார் 1200 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை அரசு செய்து வருகிறது.
கடந்த 20/7/2023 அன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பழனி வருவாய் கோட்டாட்சியருக்கு முன்மொழிவுகளை வழங்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஒருவேளை அரசின் இந்த முயற்சி வெற்றி பெற்றால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து விவசாயத் தொழிலை விட்டு வெளியேறும் நிலை உருவாகும். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது நன்கு இயங்கி வந்த, பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கிய ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தியது.
தற்போது கோவில் நிலம் மற்றும் விவசாய நிலங்களை அபகரித்து தொழிற்சாலை அமைக்க திமுக முயற்சிப்பது என்ன நியாயம். திமுகவின் போலி விவசாய நாடகம் அம்பலம் ஆகியுள்ளது.
விவசாயிகளின், பக்தர்களின் வயிற்றில் அடித்து கோவில் நிலத்தையும் விவசாய நிலத்தையும் திருட முயற்சித்தால் இந்து முன்னணி வேடிக்கை பார்க்காது, சட்டரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் விவசாய பெருமக்கள் மற்றும் பழனி முருக பக்தர்களை ஒருங்கிணைத்து திண்டுக்கல் மாவட்டம் இதுவரை கண்டிடாத மிகப்பெரிய போராட்டத்தை இந்து முன்னணி முன்னெடுக்கும் என்பதை அரசுக்கு எச்சரிக்கையாக சொல்ல விரும்புகின்றோம்