பரனூர் ஸ்ரீ ஸ்ரீ அண்ணா கிருஷ்ணப்ரேமி ஸ்வாமி விதேக முக்தி! அன்பர்கள் திரண்டு அஞ்சலி!

Published:

krishnapremi swami - 2026
#image_title

பக்தர்களால் ஸ்ரீ ஸ்ரீ அண்ணா எனவும், கிருஷ்ணபிரேமி ஸ்வாமிகள் எனவும் அன்புடன் அழைக்கப்பட்ட, பரனூர் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி ஸ்வாமிகள், ஆக.31 ஆவணி பௌர்ணமி இன்று அதிகாலை முக்தி அடைந்தார். அவரது வயது 89.

கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள், நாமசங்கீர்த்தனம் எனும் பக்தியைப் பரப்பியவர். அதன் மூலம் பக்தர்களை ஒருங்கிணைத்து கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, ஆன்மிகப் பயிர் வளர்த்தார். அவரது சொற்பொழிவைக் கேட்பதற்கென இளைஞர் கூட்டம் ஒன்று உருவாகி, நாம சங்கீர்த்தனத்தில் தங்களை இணைத்துக் கொண்டு, பயிற்சி பெற்று, இன்று அவர் பெயரால் பல இடங்களில் நாம சங்கீர்த்தனங்களை நடத்திக் கொண்டிருக்கிறது.

ஸ்ரீ ஸ்ரீ அண்ணா, கடந்த சில நாட்களாக வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவுடன் இருந்தார். இந்நிலையில், குரு வாரமான வியாழன் இன்று அதிகாலை, ஆவணி பௌர்ணமி திதியில், அவர் முக்தி அடைந்தார். இச்செய்தியறிந்து அவரது பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது திருமாளிகையில் பெரும் எண்ணிக்கையில் கூடினர். அவருக்கு அஞ்சலி செலுத்த நீண்ட நேரம் வரிசையில் நின்று, அவரது திருமேனிக்கு அஞ்சலி செலுத்தினர். 1934 ஆக.31ம் தேதி பிறந்தவர், 2023 ஆக.31 அன்று முக்தி அடைந்தார் என்பதை பலரும் குறிப்பிட்டுக் கூறினர்.

ஸ்ரீஸ்ரீ அண்ணா குறித்து சமூகத் தளங்களில் பலரும் பகிர்ந்து கொண்டனர். அவரது நாம சங்கீர்த்தன, பாகவத பிரசார வாழ்க்கை குறித்து பலரும் பகிர்ந்து கொண்ட கருத்துகள்….

பக்தர்களால் ஸ்ரீ அண்ணா என்று அழைக்கப்படும் ஸ்ரீஸ்ரீகிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் பக்த கோலாஹலனின் திருவடியை நள்ளிரவு 1.40 மணிக்கு அடைந்தார்கள்.
இவர் திருச்சேங்கனூரில் ஸ்ரீவைஷ்ணவ பூர்வாசாரியரான ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையின் பெண் வயிற்றுப் பரம்பரையில் 31-08 –1934 ல் ஸ்ரீ ஜயந்தி அன்று அவதரித்தார்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

சிறு வயதிலேயே அவர் ஒரு மஹாபுருஷார் என்று விளையாட்டுகளின் மூலமாக வெளிப்படுத்தினார்கள்.
ஸ்ரீமத் பாகவதம் தான் அவர் மூச்சாக இருந்தது. பாரத நாடு எங்கும் ஸ்ரீ பாகவத ஸப்தாஹ ஞான வேள்வியை நடத்தினார். தமிழ்நாட்டில் அதற்குப் புத்துயிர் வழங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் பஜன பத்ததிக்கும் புத்துயிர் வழங்கினார். நூற்றுக்கணக்கான பஜனை பாடல்களை ஸம்ஸ்க்ருதம், தமிழ், கன்னடம், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் பக்தியுடன் பாடியுள்ளார்.

108 திவ்யதேசத்து எம்பெருமான்கள் மீதும் ஸம்ஸ்க்ருதத்தில் கீர்த்தனைகள் பாடி உள்ளார். இதை தவிர ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் நூற்றுக்கணக்கான நூல்கள் இயற்றி பேருபகராம் செய்துள்ளார்.

கிராமங்கள், நகரங்கள் தோறும் பாரத நாட்டு எல்லா வைணவ ஸம்ரதாயத்தை சேர்ந்த மஹான்களின் சரித்திரம், ஸ்ரீராமாயண, ஸ்ரீ பாகவத , ஸ்ரீ பாரத ப்ரவசனங்களை செய்துள்ளார்கள்.

அவருடைய ஆராதன பெருமாளான ஸ்ரீ பக்த கோலாஹலனுக்கு திருக்கோவலூர் அருகில் உள்ள பரனூர் என்னும் க்ராமத்தில் கோவில் கட்டி அனைத்து உத்ஸவங்களை நடத்தி வந்தார்கள். மேலும் ஸ்ரீ.ப்ருந்தாவனம், ஸ்ரீ அயோத்யா, ஸ்ரீ பண்டரிபுரம், ஸ்ரீ சேங்கனூர் திவ்யதேஸங்களில் கோவில்கள் கட்டி உத்ஸவங்கள் நடத்தி வந்தார்கள்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

பல்லாயிரக்கணக்கான மனிதர்களை நல்வழி படுத்தி ஆன்மீகத்தில் ஈடுபட செய்தார்கள். அன்பே வடிவடுத்தார் போல இருந்து பக்தர்களின் குடும்பத்தில் ஒருவராகவே திகழ்ந்தார்.

ஸ்ரீரங்க மஹாத்மியம் அதாவது திருவரங்க அருமை,பெருமைகளை இவரை போல பாமரனுக்கும் புரியுமாறு உரைக்க எவர் அவதரிப்பார்களோ?
கோடிக்கணக்கான ராம நாப ஜெப தவத்தை கொண்டு தம் எளிமையான வாழ்வால் லட்சகணக்கானவர்களுடைய வாழ்விலும் ஆத்மஜோதி ஏற்றிவைத்த நம் கண்முன் வாழ்ந்த மஹாத்மா ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் திருவரங்கன் திருவடியை அடைந்தது… ஹரே ராம ராமராம ஹரேஹரே..
ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே…!

ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமி, போதேந்திர தீர்த்தரை தம் மானசீக குருவாகப் போற்றினார். திருக்கோவிலூர் தபோவனத்தில் புகழ்பெற்றிருந்த ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகள் அவருக்கு பெரும் வழிகாட்டியாய் இருந்தார். கிருஷ்ணப்ரேமியின் திருமண வாழ்க்கைக்கு அடித்தளமிட்டு, அவரை ஸ்ரீமத் பாகவத ஸப்தாகம் எனும் ஏழு நாட்கள் கதைகளைச் சொல்ல உந்துதலாகவும் இருந்தார். ஸ்ரீ கிருஷ்ணர் மீது பெரும் காதல் கொண்டிருந்த கிருஷ்ணப் ப்ரேமி, பிரேமிகா சம்பிரதாயம் எனும் வழிபாட்டு முறையை பரப்பினார்.

அவருக்குப் பிடித்த இஷ்ட தெய்வமாக திருக்கோவலூரில் குடிகொண்டிருக்கும் கோலாகலன் ஆகிய ஸ்ரீ கிருஷ்ணன் விளங்கினார். கண்ணனையே தம் தெய்வமாக வழிபட்ட அவர், திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள பரனூரில் கிருஷ்ணருக்கு அழகான கோவில் ஒன்றையும் கட்டினார். அங்கேயே வாழத் தொடங்கிய அவர், காலையில் சுப்ரபாதம் தொடங்கி, மதியம் பூஜை, இரவு டோலோத்ஸவம் வரை ஸ்ரீ கிருஷ்ணருக்கு அனைத்து சேவைகளையும் தாமே செய்தார்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

ஸ்ரீ கிருஷ்ண உத்ஸவ க்ருதிகள் பல இயற்றி உள்ளார். அந்த க்ருதிகள், பரனூரில் ஸ்ரீ கிருஷ்ணரின் பூஜையின் போது பாடப்பட்டு வருகின்றன. ராகவ சதகம், ராதிகா சதகம், கோவிந்த சதகம், ரங்க சதகம் என்பன உள்ளிட்ட சதகங்களை இயற்றியுள்ளார்.

இந்தியர்களின் மனத்தில் பக்தி பற்றிய விழிப்புணர்வைப் பரப்ப, கன்னியாகுமரி முதல் இமயமலை வரை இந்தியா முழுவதும் பலமுறை சுற்றுப்பயணம் செய்துள்ளார். ஸ்ரீமத் ராமாயணம், மகாபாரதம், பக்தவிஜயம், பகவத் கீதை, ஆழ்வார்கள் வைபவம், ஸ்ரீமத் பாகவதம், உபநிடதங்கள், ஸ்ரீரங்க புராணம் போன்ற பல தலைப்புகளில், பல நகரங்களில் சொற்பொழிவுகளை நிகழ்த்தி உள்ளார்.

அவரது திருமேனிக்கான இறுதிக் காரியங்கள் இன்று ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அஞ்சலி செலுத்தினர்.

Related articles

Recent articles

spot_img