புது தில்லி:
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கில் இடப்பட்ட அப்சல் குரு குறித்து முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்த பேட்டி, குஜராத்தில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜகான் குறித்து முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளையும் தெரிவித்த கருத்து ஆகியவை தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று முன்தினம் அளித்த பேட்டி ஒன்றில், “கடந்த 2001-ல் நாடாளுமன்ற தாக்குதல் சதியில் அப்சல் குருவுக்கு பங்கு இருந்ததா என்ற பலத்த சந்தேகம் உள்ளது” என்றார்.
இதுபோல் முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை அளித்த பேட்டியில், “இஷ்ரத் ஜகான் வழக்கில் காங்கிரஸ் கட்சி தலையிட்டது. இவ்வழக்கில் 2 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2-வது பிரமாண பத்திரத்தில் முரண்பாடுகள் இருந்தது. இதற்கு அரசியல் தலையீடே காரணம்” என்றார்.
மேற்கண்ட இந்த இருவரின் கருத்துகளால் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்குவதற்கு முன்பாக, பாஜக உறுப்பினர் அனுராக் தாக்கூர் இந்த விவகாரத்தை எழுப்பினார்.
“குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை அரசியல் ரீதியாக பழி தீர்க்கவே முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முயன்றுள்ளது. இஷ்ரத் ஜஹான் விவகாரத்தில் பிரமாண பத்திரத்தை திருத்தியது யார் என்பதை நாடு அறிந்துகொள்ள விரும்புகிறது” என்றார்.
இதற்கு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இந்நிலையில் மக்களவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுந்து, “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் குறித்து அனுராக் தாக்கூர் தெரிவித்த அவதூறான கருத்தை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா கூறிய கருத்து அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது” என்றார். அவருக்கு தேசியவாத காங்கிரஸ், இடதுசாரி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி எழுந்து, “அனுராக் தாக்கூர் பெயரை குறிப்பிட்டு கார்கே தனது கருத்தை தெரிவிக்க தடையில்லை என்றால், அனுராக் தாக்கூருக்கும் அவையில் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும்” என்றார்.
அனுராக் தாக்கூர் எழுந்து, ப.சிதம்பரம், ஜி.கே.பிள்ளை கருத்து தொடர்பாக பேசத் தொடங்கியவுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பாஜக உறுப்பினர்கள், “இந்த விவகாரம் குறித்துப் பேசுவதற்கு அனுமதி கேட்டு ஏற்கெனவே நோட்டீஸ் கொடுத்துள்ளோம்” என்றனர்.


