நாமக்கல் மாவட்டம் திருசெங்கோடு அருகே சக மாணவர்கள் தாக்கியதில் நான்காம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருசெங்கோட்டை அடுத்த கோழிக்கால்நத்தத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயின்று வந்த தலித் வகுப்பை சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவரான சூர்யாவிற்கும், சக மாணவர்களான நிதிஷ், சதீஷ் ஆகியோர் இடையே கடந்த 29 ஆம் தேதி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
ஜாமின்ட்ரி பாக்ஸை எடுத்தது தொடர்பாக ஏற்பட்ட இந்த மோதலில், தலையில் படுகாயமடைந்த சூர்யா சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சூர்யா உயிரிழந்தார்.
மாணவன் இறந்ததை அடுத்து திருசெங்கோடு போலீசார், எஸ்.சி -எஸ்.டி பிரிவின் கீழ் மாணவர்கள் நிதிஷ் மற்றும் சதீஷ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக கோழிக்கால் நத்தம் துவக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் வகுப்பாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சூர்யாவின் மரணத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சூர்யாவின் தந்தை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
கோழிக்கால் நத்தத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களை அப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் இழிவாக நடத்தி வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோழிக்கால் நத்தம் பொது மக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.


