தேங்காய் பால் புளி சாதம்
தேவையான பொருட்கள்
அரிசி – ஒரு கப்
மிளகாய் வற்றல் – 4
புளி – பெரிய எலுமிச்சை அளவு
தேங்காய் துருவல் – அரை கப்
கடலைப்பருப்பு – அரை மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
வெந்தயம் – அரை தேக்கரண்டி
கல் உப்பு – அரை மேசைக்கரண்டி+அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
தக்காளி – 2
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் ஊற வைக்கவும். அரிசியை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய் துருவலை போட்டு முக்கால் கப் தண்ணீர் ஊற்றி அரைத்து, வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும். பிறகு மிக்ஸியில் அரை கப் தண்ணீர் ஊற்றி அரைத்து தண்ணீர் பால் எடுத்துக் கொள்ளவும். மீண்டும் அரைத்த தேங்காயுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி கலக்கி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, கரைத்து புளி கரைசல் எடுத்துக் கொள்ளவும். மீண்டும் கால் கப் தண்ணீர் ஊற்றி கரைத்து புளிக்கரைசல் எடுக்கவும். இந்த புளி கரைசலை முக்கால் கப் தண்ணீர் தேங்காய் பாலுடன் கலந்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் வெந்தயத்தை போட்டு ஒரு நிமிடம் பொன்னிறமாக வறுத்து பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், ஊற வைத்த கடலைப்பருப்பை போட்டு ஒரு முறை வதக்கி விடவும்.
பின்னர் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
அதில் நறுக்கின தக்காளியை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். அதில் புளிக்கரைசலுடன் கலந்து வைத்திருக்கும் தண்ணீர் பாலை ஊற்றவும்.
பிறகு உப்பு போட்டு கிளறி மூடி வைக்கவும். 3 நிமிடம் கழித்து கொதித்து நுரையுடன் பொங்கி வரும் போது ஒரு முறை கிளறி விட்டு அரிசியை களைந்து போடவும்.
பின்னர் ஒரு நிமிடம் கழித்து அதனுள் பொடி செய்து வைத்திருக்கும் வறுத்த வெந்தயத்தை போட்டு, வெய்ட் போடாமல் மூடி வைக்கவும்.
அதன் பிறகு 2 நிமிடம் கழித்து திறந்து கிளறி விடவும். மீண்டும் 2 நிமிடம் கொதித்ததும் எடுத்து வைத்திருக்கும் திக்கான தேங்காய் பால் ஊற்றவும்.
ஒரு முறை கிளறி விட்டு குக்கரை மூடி வெய்ட் போடவும். 3 விசில்(12 நிமிடம்) வந்ததும் இறக்கி வைத்து விடவும். நீராவி முழுவதும் போனதும் திறக்கவும்.
விரைவில் தயாரிக்கும் புளி தேங்காய்பால் சாதம் தயார். நாம் புளிக்கரைசலை தயாரித்து பிறகு தான் சாதத்தில் போட்டு கிளறுவோம் ஆனால் உடனே தயார் செய்யும் புளிசாதம் இது.