spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

“மா” புராணம்

- Advertisement -

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்-

(ஆசிரியர், கலைமகள்)

மா புராணம் என்றால் ஏதோ மாமரத்தைப் பற்றி நான் எழுதப் போகிறேன் என்று எண்ணி விடாதீர்கள். அரிசி மா சத்துமா இவைகளைப் பற்றித்தான் கீழே விவரமாகத் தந்துள்ளேன். பூஜைக்கு உரியவை இந்த அரிசிமாவும் சத்துமாவும்!!

இப்படி ஒரு சிந்தனை ஏன் ஏற்பட்டது? என்றால் நேற்று கோகிலா அஷ்டமி. இன்று கிருஷ்ண ஜெயந்தி. இந்த இரண்டு நாளிலும் என் மனைவி வீடு முழுக்க அரிசி மாவினால் கிருஷ்ணனின் பாதங்களை வரைந்து இருந்தாள்……

அரிசி மாவை வைத்துக்கொண்டு கோலம் இடுவது நம்முடைய சம்பிரதாயங்களில் ஒன்றாகும்! ஏனென்றால் எறும்பு பூச்சிகள் இந்த மா துகள்களைத் தின்று உயிர் வாழும் என்கின்ற அர்த்தத்தில் தான்!.

மா கோலம் இடுவது கூட ஒரு விதத்தில் மனிதாபிமானத்துடன் சம்பந்தப்பட்டது.

பச்சை அரிசியை நீரில் நனைத்து உலர்த்தி உரலில் இடித்து மாவாக்குவார்கள். இந்த மாவுடன் வெல்லப்பாகைச் சேர்த்து பிசைந்து கூடவே ஏலக்காய் துகள்களையும் சேர்ப்பார்கள். இந்த கூட்டுப் பொருள் மாவிளக்கு மா ஏற்றப் பயன்படுகிறது.

பிசைந்த மாவைக் குவித்து நடுவில் குழியிட்டு அதில் நெய் ஊற்றி ஏற்றுவார்கள். புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்திம் அன்று மா விளக்கு மா ஏற்றுவோர் உண்டு! பெண் தெய்வங்களுக்கும் மா விளக்குமா ஏற்றுவதுண்டு. அதேபோல் பெருமாள் முன்பாகவும் மாவிளக்கு ஏற்றி வழிபடுபவர்கள் இருக்கிறார்கள். நினைத்தக் காரியம் நடப்பதற்காக சுப காரியங்கள் கை கூடுவதற்காக மாவிளக்கு ஏற்றுகிறேன் என்று வேண்டிக் கொள்வதும் உண்டு.

அரிசி மாவைப் போல சத்துமாவும் யாக காரியங்களுக்குப் பயன்படக்கூடியதாகும். சில வேள்விகளின் போது சத்து மாவை நிவேதனம் செய்வதுடன் அக்கினியில் இடுவதும் உண்டு. வேத பிராமணர்கள் யாகம் செய்யும் பொழுது சத்து மாவை கஞ்சியாகக் காய்ச்சிக் குடிப்பார்கள். இந்தக் கஞ்சியில் உப்பு சேர்க்கப்படாததால் இது பத்து ஆகாரம் ஆகாது என்ற விதியும் இருக்கிறது. இது ஒரு சூட்சமமான விஷயம்.

மண்டை மா விளக்கு என்கின்ற பிரார்த்தனை தென் மாவட்டங்களிலும் குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்திலும் செய்யப்படுகிறது. நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், நல்ல புத்திசாலியான குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகவும் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் அரிசி மாவில் முன்னர் சொன்னபடி வெல்லப்பாகு ஏலக்காய் இவைகளைச் சேர்த்து நெய் விளக்கு இடுவார்கள். இது ஒரு பலகையின் மீது வைக்கப்பட்டிருக்கும். பலகையை தூக்கியபடி கோவிலை வலம் வருவார்கள். இந்த மாவிளக்குமா பெரும்பாலும் கோவில்களில் தான் ஏற்றப்படும். தலையில் தூக்கிக் கொண்டு செல்வதால் மண்டை மா விளக்கு என்று இதைச் சொல்கிறார்கள்.

தினைமாவு முருகனுக்கு மிகவும் பிரியமான உணவாகும். காட்டில் வாழும் வேடுவர்கள் தினையை மாவு போன்று செய்து உணவில் பயன்படுத்துவார்கள். எனவே இதுவே வள்ளிக்கு உணவானது. அதனால் முருகனுக்கும் தினை மாவு நிவேத்தியம் செய்யப்படுகிறது. முருக வழிபாட்டின் போது தினை மாவு பிரசாதம் பிரதானமாக இருக்கும். திருச்செந்தூரிலும் கதிர் காமத்திலும் தினை மாவில் மா விளக்கு ஏற்றுவோரும் உண்டு.

தெள்ளு தினை மாவும் தேனும் பரிந்து அளித்த வள்ளிக் கொடியை மணந்தோனே… என்பது குமரகுருபரின் வாக்காகும்.

கேழ் வரகு மாவும் இந்துக்களின் பண்டிகைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக ஆடி மாதத்தில் எல்லா அம்மன் கோவில்களிலும் கூழ் ஊற்றுவார்கள். கேழ்வரகு மாவைப் புளிக்க வைத்து அதில் அரிசி நொய் (குருணை என்று தென் மாவட்டங்களில் அழைப்பார்கள்) சேர்த்து கூழாக்கி தெய்வங்களுக்குப் படைக்கின்றனர்.

கூழ் ஊத்துவது என்பது சென்னை போன்ற நகரங்களில் பெரிய விழாவாக எடுக்கப்படுகிறது.” கஞ்சியோ கூழோ நாம் உழைத்து சாப்பிட்டால்தான் திருப்தி” என்கிற பழமொழியும் உண்டு.

சில குடும்பங்களில் இறப்புக்குப் பின் …….. அக்னிக்கு உடம்பைக் கொடுத்த பின் அரிசி மாவில் மனித உருவம் செய்து மந்திரங்களுடன் ப்ரீதி செய்வது உண்டு. மா என்பது மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாதது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe