“கனல் மணக்கும் பூக்கள்”
(மீ.விசுவநாதன்)
அகிலம் வாழ ஆழ்ம னத்தில்
நிகழும் பூஜை நிம்மதி கூட்டும்
அன்புப் பூக்கள் ; அடுத்தவர் நலனில்
வம்பு செய்யா வாசனைப் பூக்கள் ;
தீதும் நன்றும் தெறித்திடும் கனலில்
தோதாய்ப் பூத்த தொடரே பிறப்பு !
வேள்வித் தீயில் விடுகிற நெய்யை
நீளும் நாக்கால் ஏற்று வருகிற
ஏப்பப் புகையும் கனல்மணப் பூவே !
சாப்பிடும் போதும், சரசத்தில் கணவன்
காதல் மனைவியைக் கட்டி அணைக்கும்
போதில் வருவதும், புகழுடைக் காமக்
கண்கள் உமிழ்வதும் கனல்மணப் பூவே!
மண்ணில் உள்ள மகத்தான குழந்தைகள்
அழகே படைத்த அற்புத மலர்கள்
பழகப் பழக பாசக் கனலின்
மணத்தைப் பரப்பி மனத்தின் சினத்தை
கணத்தில் விரட்டும் கடவுள் உருக்கள் !
பகையும் வெறுப்பும் பணத்து வெறியும்
புகையும் பொறாமை புன்மைக் குணமும்
அடுத்தவர் பற்றி அவதூறு சொல்லி
அடுக்கும் புகார்கள் அனாக ரீகமும்
தேசப் பற்றைக் கேலி பேசும்
நாசக் கூட்ட நயவஞ் சகமும்
அண்ணன் தங்கை அக்கா தம்பி
மண்ணின் உறவை மக்கச் செய்யும்
தொலைக்காட்சித் தொடரின் பொய்யாம் நச்சும்
விலைமதிப் பில்லா இளைஞர் உள்ளம்
அலையும் நிலைக்கே ஆன கல்வியும்
சிலைகள் திருட்டும் செய்தி ஊடகப்
பொய்யும் புரட்டும் புகழை விரும்பி
மெய்யை விரட்டும் வேட தாரிகள்
நாட்டைக் காக்கும் நமது வீரரை
ஓட்டுக் காக உதறி எறிவதும்
மதுவை விற்று வருமானம் ஏற்றி
பொதுவாம் சட்டக் குடிஉரிமை தூற்றிக்
கொள்கை இல்லா கோமாளி அரசியல்
கள்ளப் பணத்தில் களியாட்ட மிடுவதும்
ஆத்திக நாத்திக அரைக்குறை அறிவால்
ஆத்திர மூட்டும் அன்றாட நிகழ்வும்
கல்வியைக் கற்கும் காலம் தொலைத்து
வல்வினை யாளரின் வாய்ச்சொல் கேட்பதும்
இயற்கை வாழும் எழிற்கா டழித்து
செயற்கை வீடுகள் செழித்து வருவதும்
புதுப்புது நோய்களைப் பூக்கொண் டழைப்பதும்
எதுக்கெது பொருத்தம் என்பத றியாமல்
கற்பனைப் பொழுதில் கண்டதே கோலமாய்
அற்புத நாள்களை அழிக்கும் அவலமும்
தும்பைப் பூவாய்த் துலங்கும் பாச
அம்மை அப்பன் அன்பை அழித்து
முதியோர் இல்லம் கொண்ட டைப்பதும்
விதியே விதியே வெப்பக் காற்றில்
தினமே கலந்து திசையெலாம்
கனல்மணக் கின்ற கலியின் பூக்களே.
(பாவினம்: நேரிசை ஆசிரியப்பா)
(கவிவேழம் இலந்தை சு. இராமசாமி இல்லத்தில் நடைபெற்ற சந்தவசந்த ஆண்டுவிழாக் கவியரங்கில் 23.02.2020 ஞாயிறு அன்று – படித்தது )