தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், விபரீதம் புரியாமல் கூட்டமாக நிற்பதால், கொரோனா பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகிலுள்ள புன்னையாபுரத்தில் கடந்த 4 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை. இதனால் குடிநீர் பிடிப்பதற்காக, மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சாலையில் உள்ள குடிநீர்க் குழாயில் நீர் பிடித்துச் செல்கின்றனர். இதனால் அங்கே கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தென்காசி புதிய பேரூந்து நிலையம், பழைய பேரூந்து நிலையங்களில் அமைக்கப்பட்டு உள்ள காய்கறிகள், மட்டன், மீன், கோழி சந்தைகளில் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்து இடைவெளி இல்லாமல் பொருட்கள் வாங்குகின்றனர் என்றும், சமூக இடைவெளி குறித்த விழிப்பு உணர்வு இல்லாமல் இருப்பதால், கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப் படுகிறது.
அது போல், தென்காசி ஐந்துகடை கசாப்பு கடை முக்கில் செயல்பட்டுவரும் 1வது வார்டு கூட்டுறவு சங்க நியாய விலைக்கடையில் அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையைப் பெற இடைவெளி இல்லாமல் கூட்டமாக மக்கள் நிற்பதைப் பார்த்து பலரும் இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர்