
கொரோனா வைரஸ் கிருமித் தொற்று இல்லாத நகரமாக செங்கோட்டை தொடர்வதற்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர சபை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த நகரில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று இல்லாத நிலையில் இனிவரும் காலங்களிலும் அந்த நிலை தொடர தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி செங்கோட்டை வட்ட காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சியாம், கோபால் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் ஆறு முக்கிய சாலைப் பகுதி, வீதிகளை முழுவதுமாக மூடியுள்ளனர்.
மதுரை – செங்கோட்டை சாலையின் இலத்தூர் சாலையில் இருந்து நகருக்குள் வரும் கிருஷ்ணன் கோவில் தெரு கீழ் பகுதி, அம்மன் சன்னதி தெரு கீழ் பகுதி ஆகிய இரு பகுதிகளும் முற்றிலும் மூடப் பட்டு, காவல் நிலையப் பகுதி வழியே மட்டுமே நகருக்குள் சென்று வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

அடுத்து, தாலுகா அலுவலகம் சந்திப்பு, வாஞ்சிநாதன் சிலை அருகில், வனத்துறை சோதனைச் சாவடி, காலாங்கரை, விஸ்வநாதபுரம் பகுதி என்று அனைத்து பகுதிகளும் அடைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் இருந்து எவரும் வெளியில் செல்லாமல் இருக்கவும் வெளி நபர்கள் எவரும் நகருக்குள் வராமல் தடுக்கவும் போலீசார் தடுப்புகளை அமைத்து டிரோன் கேமரா மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தடையை மீறி வருபவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இதுபோல் செங்கோட்டை அருகே உள்ள வல்லம் கிராமத்துக்குச் செல்லும் பிரதான ஆற்றுப்பால சாலையும் அடைக்கப்பட்டுள்ளது.


