தென்காசி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 118 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில், 90 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதே அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது. இந்நிலையில், இதுவரை இல்லாத உச்சமாக இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக தொற்று கண்டறியப்பட்டவர்களில் 15 பேர் சென்னையில் இருந்து வந்தவர்கள். 2 பேர் ஹரியாணாவில் இருந்து வந்த தம்பதி. ஒருவர் மட்டுமே உள்ளூரில் இருந்தவர்.
இவர்கள் தென்காசி, கடங்கனேரி, ஆலடிப்பட்டி, ஆலங்குளம், ஏ.பி.நாடானூர், இலஞ்சி, செங்கோட்டை, தேவிபட்டிணம், சங்கரன்கோவில், சோலைச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.