லோன் தர்றோம்.. போலி கால் சென்டர் வைத்து ஏமாற்றிய ஜோடி!

Published:

visiting card 1 - 2026

சென்னை வேளச்சேரி செல்லியம்மன் நகரில் குடியிருந்து வருபவர் புருஷோத்தம்மன் (22). இவர் தன்னுடைய சகோதரியின் குடும்பச் தேவைக்காக லோன் கேட்டு ஆன் லைனில் விண்ணப்பித்திருந்தார்.

அப்போது புருஷோத்தமனின் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்ட பெண் ஒருவர் , தன்னை பிரபலமான வங்கியில் வேலைப்பார்ப்பதாகக் கூறியிருக்கிறார். பின்னர் எந்தவித அடமானமும் இன்றி குறைந்த வட்டியில் தங்கள் வங்கியில் லோன் கொடுப்பதாகவும் அந்தப் பெண் தெரிவித்திருக்கிறார். அப்போது, புருஷோத்தமனுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

அதற்கு அந்தப் பெண், கொரோனா காலக்கட்டத்தில் வேலையை இழந்தவர்களுக்காகவும் நலிவடைந்தவர்களுக்காகவும் தங்கள் வங்கியில் அரசால் குறைந்த வட்டியில் லோன் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

shanmugapriya - 2026

அதோடு வங்கியின் அடையாள அட்டையையும் புருஷோத்தமனுக்கு அனுப்பி நம்பவைத்திருக்கிறார். அதன் பிறகு அந்தப் பெண்ணை புருஷோத்தமன் நம்பியிருக்கிறார். இதையடுத்து அந்தப் பெண் உங்களுக்கு எவ்வளவு ரூபாய் லோன் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு புருஷோத்தமன் 2 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்று பதிலளித்திருக்கிறார்.

இதையடுத்து புருஷோத்தமனுக்கு லோன் கொடுப்பதாகக் கூறி அந்தப் பெண் சில ஆவணங்களையும் கேட்டு வாங்கியிருக்கிறார். பின்னர் லட்சம் ரூபாய் லோனுக்கு 16,000 ரூபாய் வட்டி செலுத்த வேண்டும் என்று கூறியதோடு இன்ஷூரன்ஸுக்காக 7,000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு ஜி.எஸ்.டி-க்காக ரூபாய் 3,000 செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அந்தப் பெண் கேட்ட பணத்தை புருஷோத்தமன் செலுத்திய பிறகும் லோன் தொகை வரவில்லை.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

இந்தச் சமயத்தில் சிபில் ஸ்கோரை அதிகபடுத்த 3.000 ரூபாய் வேண்டும் என்று அந்தப் பெண் கேட்டிருக்கிறார். அதனால் சந்தேகமடைந்த புருஷோத்தமன், லோன் தொகையில் அந்தப் பணத்தை பிடித்தம் செய்யும்படி கூறியிருக்கிறார். அதன் பிறகு அந்தப் பெண் போன் இணைப்பை துண்டித்துவிட்டு போனையும் சுவிட்ச் ஆஃப் செய்திருக்கிறார். லோன் கேட்டு புருஷோத்தமன் அந்தப் பெண்ணின் செல்போன் நம்பரில் தொடர்புகொண்டபோது எந்தவித பதிலும் இல்லை. அதன் பிறகே தான் ஏமாற்றப்பட்டதை புருஷோத்தமன் உணர்ந்திருக்கிறார்.

இதையடுத்து அடையாறு துணை கமிஷனர் விக்ரமனைச் சந்தித்து புகாரளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்த துணை கமிஷனர் விக்ரமன், அடையாறு சைபர் க்ரைம் போலீஸ் டீமுக்கு உத்தரவிட்டார். தலைமைக் காவலர்கள் சதீஸ்குமார், ஜானி விஜய், முகிலன், கிரி, சண்முகானந்தம் முதல்நிலை காவலர் லோகநாதன், ஆகியோர்கொண்ட டீம் புருஷோத்தமனுக்கு போனில் தொடர்பு கொண்டவரின் செல்போன் நம்பரை ஆய்வு செய்தது.

premnath 1 - 2026

அந்த நம்பரில் போலீஸார் தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆஃபில் இருந்திருக்கிறது. உடனே சைபர் க்ரைம் போலீஸார் சிம்கார்டு பயன்படுத்தப்பட்ட செல்போனின் ஐஎம்இஐ நம்பரைக் கண்டறிந்தனர். அதன் மூலம் மோசடி செய்தவரின் இருப்பிடத்தை போலீஸார் கண்டறிந்தனர். திருவள்ளூர், வேப்பம்பட்டி சி.டி.ஹெச் சாலையில் செயல்பட்ட கால் சென்டரிலிருந்துதான் புருஷோத்தமனுக்கு போன் அழைப்பு வந்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

இதையடுத்து போலீஸார் அந்தக் கால் சென்டருக்கு சென்றனர். அங்கு நங்கநல்லூரைச் சேர்ந்த சண்முகபிரியா (24), அவரின் ஆண் நண்பரான செவ்வாப்பேட்டையைச் சேர்ந்த பிரேம்நாத் (30) ஆகியோர் போலி கால் சென்டரை நடத்திவந்தது தெரியவந்திருக்கிறது. அவர்களைப் பிடித்து போலீஸார் விசாரித்தபோது, வங்கியிலிருந்து லோன் வாங்கித் தருவதாகக் கூறி சிலரை இவர்கள் ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு பைக்குகள், நான்கு செல்போன்கள், 4,800 ரூபாய், விசிட்டிங் கார்டுகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் சண்முகபிரியாவையும் பிரேம்நாத்தையும் வேளச்சேரி காவல் நிலையத்தில், துணை ஆணையரின் ஸ்பெஷல் டீம் போலீஸார் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், போலி கால் சென்டரை நடத்திய சண்முகபிரியாவும் பிரேம்நாத்தையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், கைதான இருவரும் ஒரே கால் சென்டரில் வேலை பார்த்து வந்திருகின்றனர். பிறகு இருவரும் சேர்ந்து போலி கால் சென்டர்களைத் தொடங்கி இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர். லோன் கேட்டு ஆன் லைனில் விண்ணப்பிப்பவர்களின் விவரங்களைச் சேகரித்த இருவரும் குறைந்த வட்டியில், வங்கியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றிவந்தது தெரியவந்தது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

மோசடி செய்த பணத்தைக் கொண்டு பிரேம்நாத், செவ்வாப்பேட்டையில் மளிகைக்கடை நடத்திவந்திருக்கிறார். கடந்த ஓராண்டாக இந்த போலி கால் சென்டர் செயல்பட்டுவந்திருக்கிறது. இவர்கள் இருவரும் எத்தனை பேரை ஏமாற்றினார்கள் என்று விசாரித்துவருகிறோம்” என்றனர்

Related articles

Recent articles

spot_img