சென்னை:
எம்.ஜி.ஆர். கொடுத்த அதே ஆட்சியை என்னாலும் கொடுக்க முடியும், ஜெயலலிதா, கருணாநிதியின் வெற்றிடத்தை நிரப்பவே வருகிறேன் என்று பேசினார் ரஜினி காந்த். ஆன்மிக அரசியலை முன்னெடுத்துள்ள ரஜினி, வெளிப்படையான ஆன்மிகவாதியான ஜெயலலிதா, திரை மறைவில் ஆன்மிகவாதியான எம்.ஜி.ஆர்., உள்ளூர ஆன்மிகவாதியான கருணாநிதி ஆகிய மூவரையும் முன்னிலைப் படுத்திப் பேசியுள்ளார்.
திராவிட அரசியலை மையப் படுத்திய தமிழக அரசியல் களத்தில் ஈ.வே.ரா, பெரியார், சி.என். அண்ணாதுரை, மு.கருணாநிதி என மூன்று பேரின் படங்களைப் போட்டு அரசியல் நடத்துவார்கள். அது திராவிட இயக்க அரசியல் எனப்படுகிறது. இப்போது ரஜினி மாற்று அரசியலை முன்னெடுத்துள்ளதால், தன் அரசியல் நிலைப்பாட்டுக்கு ஆன்மிக அரசியல் என்று பெயர் சூட்டியுள்ளார். அதன் மூன்று தலைவர்களாக ரஜினி கோடிட்டுக் காட்டியிருப்பவர்கள், எம்ஜிஆர்., ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய மூவர்.

சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் கல்லூரியில் நடந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், எம்ஜிஆர் சிலையைத் திறந்து வைத்துப்பேசினார். அவரது பேச்சு, உள்ளத்தின் அடி ஆழத்தில் இருந்து வந்ததாகவே பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அதற்குக் காரணம், அவர் பேசிய வெளிப்படையான பேச்சு தான். முக்கால் நூற்றாண்டு தமிழக அரசியலை தன் முக்கால் மணி நேரப் பேச்சில் புரட்டிப் போட்டார் ரஜினிகாந்த்! மக்கள் தலைவனின் பேச்சு இப்படித்தான்… நேரடியாக இருக்கும்.. ஊழல், சுயநல, இனவெறியர்களுக்கு பேரிடியாக இருக்கும் என்று கருத்துதெரிவித்து வருகின்றனர் சமூக இணையதளங்களில்!
குறிப்பாக, நானே கட்சி தொடங்கினாலும், அரசியலில் மாணவர்கள் வர வேண்டாம் என்றும், பல்கலைக்கழக விழா, கட்சி மாநாடு போல மாறிவிட்டது. அரசியல் பாதை பூ பாதை அல்ல. முள், கல், பாம்புகள் உள்ள பாதை எனக்கும் தெரியும் என்றும் அவர் வெளிப்படையாகப் பேசியதுதான்!

தனது அரசியல் பாதையின் ஆசானாக அவர் குறிப்பிடுவது துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியை! அடுத்து தனது அரசியல் அரிச்சுவடி குறித்து ரஜினி கூறியது… கருணாநிதி, மூப்பனார் போன்றவர்களுடன் பழகி தான் அரசியல் கற்றுக்கொண்டேன். என்னை யாரும் ரத்தினக் கம்பளம் விரித்து வாழ்த்த வேண்டும் என்று விரும்பவில்லை. ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசியல்வாதிகள் தங்கள் வேலையை சரியாக செய்யாததால் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். அரசியலுக்கு வந்துள்ள என்னை வாழ்த்த வேண்டிய அவசியமில்லை. ஏன் ஏளனம் செய்கிறீர்கள்? கட்சியை அறிவிக்கும் முன்பே கொள்கை என்ன என்று கேட்பது, பெண் பார்க்க செல்லும் முன் திருமண பத்திரிகை எங்கே என்று கேட்பதுபோல் உள்ளது…. என்றார்.

முக்கால் மணி நேர ரஜினியின் பேச்சில் தெறிக்க விட்ட சில நறுக்குகள்…
தமிழகத்தில் தலைவனுக்கும் தலைமைக்கும் வெற்றிடம் உள்ளது. தலைவர்கள் என்றால் ஜெயலலிதாவும், கருணாநிதியும் மட்டுமே! இந்தியாவிலேயே கட்சியை கட்டுப்பாட்டுடன், நல்ல ஆளுமையுடன் வைத்திருந்தவர் ஜெயலலிதா.
13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கட்சியை கட்டிக்காத்தவர் திமுக தலைவர் கருணாநிதி. அவர் போன்ற சிறந்த அரசியல்வாதி நாட்டில் கிடையாது. அவர்களின் வெற்றிடத்தை நிரப்பவே வருகிறேன்.
என்னால் எம்ஜிஆராக முடியாது. எம்ஜிஆர் கொடுத்த அதே ஆட்சியை என்னாலும் கொடுக்க முடியும். இனிமேல்தான் ஆன்மிக அரசியலை பார்க்கப் போகிறீர்கள். தூய்மைதான் ஆன்மிக அரசியல். நம் பக்கம் ஆண்டவனே இருக்கிறான்.
எனக்கும், எம்ஜிஆருக்கும் இடையோன உறவைக் கூற விரும்பினேன். ஆனால் காலம் அமையவில்லை. இப்போது அதற்கான சந்தர்ப்பம் அமைந்துள்ளது. நான் இன்று வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்குக் காரணம் எம்ஜிஆர்தான்.
எம்ஜிஆர் போன்ற ஒரு தலைவர் இனி உருவாக முடியாது; எம்ஜிஆர் ஒரு தெய்வப் பிறவி. எம்ஜிஆரை நான் முதன்முதலாகப் பார்த்தபோது சூரியன் போல இருப்பவருக்கு யார் சந்திரன் என்று பெயர் வைத்தார்கள் என்று யோசித்தேன்.
– இவ்வாறு பேசிய ரஜினி, மாணவ சமூகத்துக்கு சில அறிவுரைகளையும் கூறினார்.
தமிழ் பேசினால் மட்டும் தமிழ் வளராது, தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும். அப்துல் கலாம், சுந்தர் பிச்சையால் தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை. மாணவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள், அதுதான் முக்கியம். படிக்கும் காலத்தில் அரசியலுக்கு வரவேண்டாம். நானே ஒரு கட்சி ஆரம்பித்தால் கூட யாரும் வர வேண்டாம். ஆனால் அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்று பேசினார். அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் இப்போது விவாதப் பொருளாகி வருகிறது.



