பைக்கை விரட்டி உதைத்து கீழே தள்ளி கொல்லும் அளவுக்கு கல் நெஞ்சக்காரர்களா காவலர்கள்?!

Published:

புதன்கிழமை திருச்சியில் நடைபெற்ற கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தபோது, இந்தக் கேள்வியைத்தான் தமிழக மக்கள் ஒவ்வொருவரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்! தம்பதியராய் இருசக்கர வாகனத்தில் செல்கிறார்கள் என்று தெரிந்தும், ஹெல்மெட் போடவில்லை என்ற காரணத்துக்காக, விரட்டிப் பிடித்து ‘கறந்து’விடலாம் என்ற எண்ணத்தில் துரத்தி, நிற்காமல் சென்ற கோபத்தை வெளிப்படுத்த காலால் ஓடிக் கொண்டிருக்கும் வண்டியை எட்டி மிதித்து, கீழே தள்ளி, பெண் விபத்தில் சிக்கி உயிரிழக்கக் காரணமாகும் அளவுக்கு கல் நெஞ்சக்காரர்களாக காவலர்கள் மாறியிருக்கிறார்களா என்ற கேள்வியைத்தான் மக்கள் முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

திருச்சியில் நடைபெற்ற சம்பவம், மிகப் பெரும் துயரம் என்பது மட்டுமல்ல, போக்குவரத்துக் காவலர்களின் அடாவடித்தனங்களை வெளிப்படுத்தும் சம்பவமாகவும் மாறி விட்டது. இது குறித்த விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. போலீசாரால் விரட்டியபோது பைக்கில் இருந்து விழுந்து உயிரிழந்த உஷாவின் கணவர் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

kamaraj - 2026

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ரவுண்டானா அருகே இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில், ஹெல்மெட் அணியாதவரை பிடிக்கும் சோதனையில் நேற்று இரவு போலீஸார் ஈடுபட்டுள்ளனர். அப்போது தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ராஜா, உஷா தம்பதி பைக்கில் வந்துள்ளனர். ராஜா, ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர்களை நிறுத்தச் சொல்லியும் பைக்கை நிறுத்தாமல் ராஜா சென்றதாகவும், இதையடுத்து பைக்கில் அவர்களை விரட்டி சென்ற காமராஜ், ராஜா ஓட்டிக் கொண்டிருந்த வண்டியை எட்டி உதைத்ததாகவும், இதில் ராஜா கட்டுப்பாட்டை இழந்து பைக் சரிந்ததில் உஷா பரிதாபமாக பலியானதாகவும் சம்பவத்தைப் பார்த்த மக்கள் கூறுகின்றனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையில் உஷாவின் உடலில் இருந்து அவரது நகைகளைக் கழற்றி ராஜாவிடம் கொடுக்கும் படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. உஷாவின் ரத்தக் கறை படிந்த சட்டையுடன் ராஜா கதறி அழும் காட்சி, காண்பவர்களைக் கண் கலங்க வைத்துள்ளது. திருமணம் செய்து கொண்டு, குழந்தை பிறந்து வாரிசுகளை வளர்க்கும் ஆயிரமாயிரம் கனவுகளுடன் தான் ஒரு ஆண்மகன் வாழ்க்கையில் காத்திருக்கிறான். தனது மனைவி கர்ப்பிணியானதை அறிந்து, ஆயிரம் கனவுகளுடன் சிறகடித்துப் பறந்த ராஜாவின் மனம் என்ன துடி துடித்திருக்கும் என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

ராஜா, மருத்துவமனையில் எனது குழந்தை எங்கே? எனது மனைவி எங்கே? எனக் கதறியதைக் கண்ட மருத்துவமனையில் இருந்த பொதுமக்கள் தாங்களும் கண்கலங்கி நின்றனர். காரணம், ஈவிரக்கமற்ற முறையில் ஒரு காவலர் நடந்து கொண்ட விதம்தான்!

trichy raja police - 2026

ஹெல்மெட் அணியாமல் தன்னைக் கடந்து சென்ற ராஜாவை விரட்டிய இன்ஸ்பெக்டர் காமராஜ், திருச்சி-தஞ்சை சாலையில் பெல் ரவுண்டானா அருகே துரத்தி வந்து அவர்களை மறித்துள்ளார். ஜீப்பில் இருந்து கீழே இறங்கி வந்த அவர் ராஜாவின் இருசக்கர வாகனத்தை ஆவேசமாக எட்டி உதைத்துள்ளார். இதனால் அவர் நிலை தடுமாறி மனைவி உஷாவுடன் சாலையில் விழுந்தார். இதில் 3 மாத கர்ப்பிணியான உஷா படுகாயம் அடைந்தார். அவருடைய கர்ப்பம் கலைந்து ரத்தம் வெளியேறி அதே இடத்தில் துடிதுடித்து மயங்கிச் சரிந்துள்ளார்.

usha police - 2026இந்தச் சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள், அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அவர்களே உஷாவையும் ராஜாவையும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உஷாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாகக் கூறி அவர் அணிந்திருந்த திருமாங்கல்யம் உள்ளிட்ட ஆபரணங்களை கணவர் ராஜாவிடம் கொடுத்தனர். அதை ராஜா கதறி அழுது வாங்கிக் கொண்ட படம் சமூகத் தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

செயின் பறிப்பு, ரவுடித் தனம் செய்பவர்கள், அரசியல் பின்னணியில் வாலாட்டுபவர்களை எல்லாம் இப்படி போக்குவரத்துக் காவலர்கள் துரத்திச் சென்று, சினிமா பாணியில் எட்டி மிதித்து வீரம் காட்டினால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், கவனக் குறைவில் சென்ற ஒரு அப்பாவியிடம் போலீஸார் வீரம் காட்டுவது காவல்துறைக்கே இழுக்கு என்பதுதான் பலரின் ஆதங்கம்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img