சென்னை:
தான் யாருடன் எல்லாம் கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதில்லை என்பது குறித்து சத்தியம் செய்து அறீத்துள்ளார் கமல். அதாவது, கயவர்களுடனும், திருடர்களுடனும் கூட்டணி கிடையாது என உறுதியாக சத்தியம் செய்கிறேன் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னையில் வியாழக்கிழமை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அவர், ” தாய் சொல்லை தட்டாதவன் நான்; அதனால் தான் மேடையில் இருக்கிறேன். வீரத்தின் உச்சம்தான் அகிம்சை!
தமிழகத்தின் நலனும் வளமும் தான் எங்கள் முதல் கொள்கை! எந்த விஷயத்திலும் மய்யத்தில் இருந்து பார்த்தால்தான் நீதியும் நியாயமும் தெரியும். எனக்கு பெண்களைப் பற்றி என்ன தெரியும் எனக் கேட்கிறார்கள். எனக்கு சேலை கட்டத் தெரியும் என்பதை மீசையை முறுக்கிச் சொல்வேன்.
கட்சிக்கான கொள்கைகளை வகுக்கும் செயல் நடக்கிறது. இன்னும் 180 நாளில் கட்சிக் கொள்கை குறித்த புத்தகம் வெளியிடப்படும்.
தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் மற்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது. ஆனால் இது போதாது… இன்னும் உயர வேண்டும். தமிழகத்தில் 3.60 கோடிப் பெண்கள் பிறக்காமலேயே இறந்து போயுள்ளனர்.
திருச்சியில் இறந்த பெண் உஷாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளேன். ஓட்டுச் சாவடி என்பது கோவில் போன்றது. கயவர்களுடனும், திருடர்களுடனும் என்றும் கூட்டணி கிடையாது என சத்தியம் செய்கிறேன்” என்று பேசினார் கமல்ஹாசன்.
முன்னதாக, தமிழக அரசின் சார்பில் திருச்சியில் இறந்த பெண் உஷாவின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதி உதவி வழங்குவதாக முதல்வர் அறிவித்தார்.

