வெள்ளிக்கிழமை மாலை அலுவலகத்தில் மாரடைப்பால் காலமான தர்மபுரி தினமணி செய்தியாளர் சமுத்திர ராஜன் படத்திற்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் சுப்பிரமணி, தர்மபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் மற்றும் செய்தியாளர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் சமுத்திர ராஜன்! பத்திரிகையாளராக சிறுவயதிலேயே பணிக்கு வந்துவிட்டவர். பல்வேறு நாளிதழ்களில் பணியாற்றி, ஐந்து வருடங்கள் முன்னர் தினமணி இதழில் பணிக்குச் சேர்ந்தார். இவர் திருச்சியில் இருந்து தருமபுரிக்கு பணி இட மாற்றம் செய்யப் பட்ட ஓரிரு நாளிலேயே மன அழுத்தம் தாங்காமல், உடன் பணி செய்யும் பலரிடமும் வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அலுவலகம் வந்தவர், தொங்கிய முகத்துடன் இருந்துள்ளார். அவரிடம் சக பணியாளர்கள் விசாரித்துள்ளனர். பின்னர் மாலை 6.30 மணி அளவில், தன் வாழ்வே சூனியமானது போல் உணர்ந்து, நெஞ்சடைத்து திடீரென அந்த இருக்கையிலேயே மயங்கிச் சரிந்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த சக பணியாளர்கள் அவரை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதை அடுத்து அவரது உடல் சொந்த ஊரான பாளையங்கோட்டைக்கு எடுத்துச் செல்லப் பட்டு, சனிக்கிழமை இன்று இறுதிச் சடங்குகள் செய்யப் பட்டன. அவரது இறுதிச் சடங்கில், திருநெல்வேலியைச் சேர்ந்த சக பத்திரிகை யாளர்கள், நிருபர்கள் கலந்து கொண்டனர். அவரது குடும்பத்தாருக்கு செய்தியாளர்கள், சக பத்திரிகையாளர்கள் தங்கள் வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.
இந்நிலையில் பணியின் போது மரணம் அடைந்த பத்திரிகையாளர் சமுத்திர ராஜனின் குடும்பத்தாருக்கு நிர்வாகத்தின் சார்பிலும், அரசு சார்பிலும் நிதி உதவி செய்து கொடுக்க வேண்டும் என்று சக பத்திரிகையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.