ராகுல் பிரதமர்… திமுக ஆட்சி: ஸ்டாலின்! தேர்தல் களத்தை கணிக்க முடியாது: தமிழிசை!

Published:

stalin stage - 2026

நாம் முன்பே கூறியபடி, மத்தியில் ராகுல் பிரதமர் ஆக வருவார்; மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதே நேரம் பாஜக., தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழக தேர்தல் களத்தை கணிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை மற்றும் தமிழகத்தில் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப் படுகின்றன. இந்நிலையில், மத்தியில் பாஜக., ஆட்சியில் அமரும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறும் நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளன.

சென்னை ராயபுரத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக., தலைவர் மு.க. ஸ்டாலின் பேசிய போது, நாம் என்ன எதிர்பார்க்கிறோமா அது தான் நாளை நடக்க உள்ளது. மத்தியில் நாம் எதிர்பார்க்கும் ஆட்சி  அமையும். ராகுல் அடுத்த பிரதமர் ஆவார் என்பதில் நான்  உறுதியாக உள்ளேன். கருத்துக் கணிப்புகளுக்கு நாம்
முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. மக்கள் கணிப்புதான்  உண்மையான கணிப்பு. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட  உடன் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஜனநாயக  முறைப்படி தமிழகத்தில் திமுக., ஆட்சிக்கு வரும்… என்று நம்பிக்கை தெரிவித்தார்.

election manifesto thuthukkudi tamilisai - 2026

இதுபோல், தமிழக பாஜக., தலைவர் தமிழிசை தனது கருத்தைத் தெரிவித்த போது, தமிழகத்தில் இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் சந்திக்கும் தேர்தல் இது. எனவே, தமிழக தேர்தல் களத்தை கணிக்க முடியாது என்றார்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 20 ஆண்டு பொது வாழ்க்கைக்கு அங்கீகாரம் தரவேண்டும் என்ற வேண்டுகோளுடன் தூத்துக்குடி மக்களிடம் வாக்குகள் கேட்டேன். அதனால், எனக்கு எந்த எதிர்மறையும் கிடையாது. நான் எந்த ஊழல் வழக்கிலும் சிறை தண்டனை பெற்றது கிடையாது. ஒரு நேர்மையான அரசியல்வாதியாக இருந்து வந்ததால், மக்கள் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள், நிச்சயம் நான் வெற்றி பெறுவேன்.

தமிழகம் இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல், எனவே, தமிழக தேர்தல் களத்தை கணிக்க முடியாது. 3 புதிய முகங்கள் கமல்ஹாசன், டிடிவி
தினகரன், சீமான் இவர்கள் எல்லாம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. மீண்டும் மோடி என்பதே எங்கள் நோக்கம் என்று கூறினார்.

lk sudhish - 2026

தேமுதிக., துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறிய போது, கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியினருக்கு பாஜக தலைவர் அமித்ஷா அளித்த விருந்தில் கலந்து கொண்ட பின்னர், சென்னை திரும்பிய சுதீஷ், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, கடந்த முறை தேர்தலின் போதும் அதிமுக தோல்வி அடையும் என வெளியான கருத்து கணிப்புகள் பொய்யானது! அது போலவே இந்த முறையும் கருத்து கணிப்புகள் பொய்யாகி அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

Related articles

Recent articles

spot_img