கடந்த ஜூன் மாதம் 5-ஆம் தேதி நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனர் உமர்பாரூக் என்ற மணி நினைவு நாளில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட திருப்பனந்தாள் தெற்கு வீதியில் பொதுக்கூட்டம் ஒன்றில் இயக்குனர் ரஞ்சித் ஆசிய கண்டத்தை ஆண்ட இந்து மாமன்னர் ராஜராஜ சோழனை பற்றி தவறான கருத்தைப் பரப்பி அவதூறு செய்து பேசி இருந்தார்
அவர் கூறியவை: ராஜராஜ சோழன் ஆட்சிக் காலம் நம்முடைய இருண்ட காலம். அவருடைய ஆட்சிக் காலத்தில் தஞ்சை டெல்டா பகுதியிலிருந்து என் நிலங்கள் மிகப் பெரிய சூழ்ச்சியின் அடிப்படையில் பறிக்கப்பட்டது! நானூறு பெண்களை விலை மாதர்கள் மாற்றி மங்கள விலாஸ் வைத்துவிட்டு மிகப் பெரிய அயோக்கியத்தனம் செய்தது! அவருடைய ஆட்சி காலத்தில்தான்! மாடு உன் தெய்வம் என்றால் அதை வெட்டி தின்பவன் நான்.
முடிந்தால் இந்து மடங்களில் உள்ள எங்கள் நிலங்களை மீட்டுத் தாருங்கள்! பொட்டு வைத்து வருகின்றவர்கள் நாங்கள் இல்லை! அவர்கள் இந்துக்கள் நாங்கள் புத்தர்கள் என்று அவர் பேசிய நச்சு கலந்த பிரிவினைவாத பேச்சு யூ டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது
அதை பார்த்த இந்துவாகிய என் மனது மிகவும் வேதனை அடைகிறது! இந்து மாமன்னர் ராஜராஜ சோழன் மீது அவதூறு பரப்பும் அவர் புகழுக்கு கேடு விளைவிக்கும் விதமாகவும் பேசியுள்ளார்!
இந்துக்கள் தெய்வமாக வணங்கும் மாடுகளை வெட்டி தின்பேனென்று இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியும் இந்த மடங்கள் மீது தேவையற்ற வதந்திகளை பரப்பி ஹிந்து ஹரிஜன மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி பேசிய பா ரஞ்சித் பேச்சு, இந்திய இறையாண்மைக்கும் இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் இருக்கிறது
எனவே தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் இந்திய சாசன சட்டப் பிரிவு 21ன் கீழ் மற்றும் இந்திய சட்டம் 295 – 97 295a 298 மற்றும் இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 490 வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
- இவ்வாறு மனு எழுதி அதன் நகல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தமிழக ஆளுநர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டிருப்பதாக நெல்லை மாவட்ட காவல்துறை ஆணையருக்கு புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது! விஷ்வ ஹிந்து பரிஷத் திருநெல்வேலி மாவட்ட செயலர் ஆறுமுகக்கனி பெயரில் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது
இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இதில் பங்குகொண்டுள்ளனர். முன்னதாக இன்று காலை மனு அளிப்பதற்காக மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்துக்கு இவர்கள் சென்றிருந்த போது, தாமதப் படுத்தியதாகவும், மனு அளிக்க உடனே அனுமதி கொடுக்கவில்லை என்றும் கூறப் பட்டது. பின்னர் பா.ரஞ்சித் குறித்து புகார் மனு அளிக்கப் பட்டதன் ரசீது கொடுக்கப் பட்டது.