மதுரை : மதுரையில் தினசரி 3000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்திட வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உலக அளவிலும் இந்திய நாடு முழுவதும் கொரோனா நோய்தொற்று அதிகரித்துள்ள நிலையில் இந்தியா அதில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக மும்பை, டெல்லி அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் சென்னை கொரோனா நோய் பரவல் அதிகரிக்கும் பகுதியாக மாறியுள்ளது. இதனால் தற்போது தினசரி சென்னையிலிருந்து கொரோனா நோய்த் தொற்று செய்தி என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் சென்னையிலிருந்து மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 10 நாட்களாக 20,000 பேர் வரை வாகனங்கள் மூலம் வருகை தந்துள்ளார்கள். விமான நிலையத்தில் இருந்து வருபவர்களை மட்டுமே கொரோனா தோற்று என்பது பரிசோதனை செய்யப்படுகிறது மற்ற இதர வாகனங்களில் வருபவர்கள் பரிசோதனை செய்யப்படவில்லை.
மாநிலத்தில் பிற மாவட்டங்கள் பரிசோதனை செய்துள்ள புள்ளிவிபரத்தின் படி மதுரை மாவட்டம் 30 ஆவது இடத்தில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் செயலற்றுக்கிடக்கிறது என்பதன் அடையாளம் இது.
நிர்வாகத்திறமையின்மைக்காக மக்களின் உயிரை காவு கொடுக்க முடியாது. இப்பொழுது ஏற்பட்டுள்ள சூழலானது மதுரை மாவட்ட மக்கள் மட்டுமன்றி தென்மாவட்ட மக்கள் அச்சப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரையில் தினசரி குறைந்தபட்சம் மூவாயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை வழியுறுத்தி மதுரை மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி. மூர்த்தி, டாக்டர் சரவணன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவல முன்பாக தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
இதில் சிறிதும் கூட சமூக இடைவெளி இல்லாமல் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடந்த இந்த போராட்டத்தினால் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
- ரவிச்சந்திரன், மதுரை