சுங்கச்சாவடி ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம்

Published:

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி ஊழியர்களை சுரண்டையிலா இருந்து காரில் வந்தவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் இந்த சுங்கச்சாவடியை கடந்து தான் செல்ல வேண்டும்.

இந்தநிலையில் தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாத புரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (வயது38), முத்துக்குமார்(34), பொன்ராஜ்(28) ஆகிய 3 பேரும் காரில் மதுரை நோக்கி சென்றனர்.

அவர்கள் 3 பேரும் பால் வியாபாரிகள் ஆவர். அவர்களது கார் நள்ளிரவு11.15 மணி அளவில் மதுரை கப்பலூர் சுங்கச்சாவடிக்கு வந்தது. அங்கு பாஸ்ட் டேக் வாகனங்கள் செல்லக்கூடிய வழியில் அவர்களது கார் சென்றது. இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அவர்களது காரை நிறுத்தி கட்டணம் செலுத்துமாறு கூறினர்.

சென்சாரில் காரின் எண் பதிவதற்காக காரை பின்னால் தள்ளி நிறுத்துமாறு சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறியிருக்கின்றனர். இதனால் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயக்குமார், திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை ஏர் பிஸ்டல் காட்டி சுட்டு விடுவதாக சுங்கச்சாவடி ஊழியர்களை மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதையடுத்து ஜெயக்குமார் உள்ளிட்ட 3 பேரும் சுங்கச்சாவடியில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். காரில் வந்தவர்கள் சுங்கச்சாவடி ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து கப்பலூர் சுங்கச்சாவடியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சுங்கச்சாவடி ஊழியர்களை காரில் வந்தவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டும் காட்சி மற்றும் அவர்கள் வந்த கார் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியிருந்தது.

துப்பாக்கியை காட்டி மிரட்டியவர்கள் வந்த கார் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தது என்பதால், மீண்டும் இந்த வழியாகத்தான் ஊருக்குச் செல்ல வேண்டும் என்று போலீசார் கருதினர். இதனால் அவர்கள் மீண்டும் வருகிறார்களா? என்று போலீசார் கண்காணித்தபடி இருந்தனர்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

இந்த நிலையில் துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் போலீசாரிடம் சிக்கிக் கொள்வோம் என்று பயந்த ஜெயக்குமார் உள்ளிட்டோர், கப்பலூர் தொழிற்பேட்டை அருகே உள்ள டீக்கடையில் நின்று என்ன செய்யலாம் என பேசி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த திருமங்கலம் போலீசார், அவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களது காரை சோதனை செய்தபோது ஒரு ஏர் பிஸ்டல் மற்றும் துப்பாக்கி இருந்தது. அதனையும், அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்த போலீசார் 3பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img