
தீபாவளி லீவைத்தொடர்ந்து பொங்கல் லீவுக்கும்.. இதே நிலைதான்! சென்னைக்கு வர.. ரயில் நிலையங்களில் முண்டியடித்த கூட்டம்!
ஒவ்வொரு பண்டிகை விடுமுறையின்போதும் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு மக்கள் செல்ல சிரமப்படுவதும், அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்ப கஷ்டப்படுவதும் வாடிக்கையான ஒன்றாக மாறியிருக்கிறது. அந்த வகையில், இந்த முறையும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர, மக்கள் ரயில் நிலையங்களில் முண்டியடித்து உள்ளனர்.
குறிப்பாக செங்கோட்டை தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலை மோதியுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில், முன்பதிவு செய்யப்படாத பயணிகளும் ஏறியுள்ளதால், பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
பொதுவாக இதுபோன்ற பண்டிகை நாட்களில், பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்தும், தாம்பரத்திலிருந்தும், எழும்பூரிலிருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. பொங்கல் பண்டிகை ஜன.15ம் தேதி தொடங்கியது. ஆனால், ஜன.14ம் தேதியான போகி பண்டிகைக்கே அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பயணிகள் ஜன.13ம் தேதி இரவும், ஜன.14ம் தேதி இரவும் புறப்பட்டு சென்றனர்.
இன்னும் சிலர் ஜன.9, 10 மற்றும் 11ம் தேதி இரவு சென்னையிலிருந்து புறப்பட்டனர். இதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இப்படி இருக்கையில், இன்றுடன் விடுமுறை முடிவடைவதால் மக்கள் சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி உள்ளது.
செங்கோட்டை தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலியில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டால்தான், அடுத்த நாள் காலை 4-6 மணிக்கு சென்னைக்கு வர முடியும். எனவே பயணிகள் அதிக அளவில் குவிந்திருக்கின்றன. சென்னை திரும்ப சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டாலும், அது போதுமானதாக இல்லாததால், பயணிகள் பாதிப்படைந்துள்ளனர். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில், முன்பதிவு செய்யப்படாத பயணிகள் ஏரியதால், முன்பதிவு செய்த பயணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட பொதிகை அதிவிரைவு ரயில் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை வழியாக தாம்பரம் வரை சென்ற கொல்லமையில் சிலம்பு அதிவிரைவு ரயில் திருநெல்வேலி இருந்து சென்னை எழும்பூர் புறப்பட்ட நெல்லை அதிவிரைவு ரயில் கன்னியாகுமரி சென்னை அதிவிரைவு ரயில் கொல்லம் திருவனந்தபுரம் நாகர்கோவில் சென்னை அதிவிரைவு ரயில் உட்பட அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்த பெட்டிகள் சாதாரண இயற்கைப் பெட்டிகள் உட்பட அனைத்து பெட்டிகளுமே எண்ணிக்கைக்கு அதிகமாக மூன்று மடங்கு பயணிகள் பயணித்தனர் ஞாயிற்றுக்கிழமை செங்கோட்டை ரயில் நிலையத்தில் பகல் 2 மணி முதல் பயணிகள் கூட்டம் மிக அதிக அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது
இனிவரும் காலங்களில் பண்டிகை விடுமுறை நாட்களில் பயணிகள் எளிதில் சென்று வர வசதியாக மேலும் கூடுதல் பயண வசதிகளை ரயில்வே துறையும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்படுத்தித் தருவது அவசியம் ஆகும்



